<rss xmlns:atom="http://www.w3.org/2005/Atom" version="2.0">
	<channel>
		<title><![CDATA[அகநானூறு]]></title>
		<link><![CDATA[http://www.premkumarmasilamani.com/tamil/a400]]></link>
		<description><![CDATA[]]></description>
		<copyright><![CDATA[copyleft @ 2009.]]></copyright>
		<category>Blogs</category>
		<language>ta</language>
		<pubDate>Tue, 14 Apr 2026 20:00:32 +0530</pubDate>
		<lastBuildDate>Tue, 14 Apr 2026 20:00:32 +0530</lastBuildDate>
		<atom:link href="http://www.premkumarmasilamani.com/tamil/a400/feed.xml" rel="self" type="application/rss+xml" />
		<docs>https://www.rssboard.org/rss-specification</docs>
		<generator>Jekyll Liquid Template in Github</generator>
		<managingEditor><![CDATA[ (பிரேம்குமார் மாசிலாமணி)]]></managingEditor>
		<webMaster><![CDATA[ (பிரேம்குமார் மாசிலாமணி)]]></webMaster>

		
		

		
			<item>
				<title><![CDATA[005 - அளிநிலை பொறா]]></title>
				<link><![CDATA[https://www.premkumarmasilamani.com/tamil/a400/005-ali-nilai-pora/]]></link>
				<description><![CDATA[<table>
  <tbody>
    <tr>
      <td><strong>நூல்</strong></td>
      <td>அகநானூறு</td>
    </tr>
    <tr>
      <td><strong>பாடல்</strong></td>
      <td>005 - அளிநிலை பொறா</td>
    </tr>
    <tr>
      <td><strong>பாடியவர்</strong></td>
      <td>பெருங்கடுங்கோ</td>
    </tr>
    <tr>
      <td><strong>திணை</strong></td>
      <td>பாலை</td>
    </tr>
    <tr>
      <td><strong>துறை</strong></td>
      <td>பொருள்வயிற் பிரியக் கருதிய தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது</td>
    </tr>
  </tbody>
</table>

<p>அளிநிலை பொறாஅ தமரிய முகத்தள்<br />
விளிநிலை கேளாள் தமியள் மென்மெல<br />
நலமிகு சேவடி நிலம்வடுக் கொளாஅக்<br />
குறுக வந்துதன் கூரெயிறு தோன்ற<br />
வறிதகத் தெழுந்த வாயல் முறுவலள் (5)</p>

<p>கண்ணிய துணரா அளவை யொண்ணுதல்<br />
வினைதலைப் படுதல் செல்லா நினைவுடன்<br />
முளிந்த ஓமை முதையலங் காட்டுப்<br />
பளிங்கத் தன்ன பல்காய் நெல்லி<br />
மோட்டிரும் பாறை ஈட்டுவட் டேய்ப்ப (10)</p>

<p>உதிர்வன படூஉம் கதிர்தெறு கவாஅன்<br />
மாய்த்த போல மழுகுநுனை தோற்றி<br />
பாத்தியன்ன குடுமிக் கூர்ங்கல்<br />
விரனுதி சிதைக்கும் நிரைநிலை அதர<br />
பரன்முரம் பாகிய பயமில் கானம் (15)</p>

<p>இறப்ப எண்ணுதி ராயின் அறத்தா<br />
றன்றென மொழிந்த தொன்றுபடு கிளவி<br />
அன்ன வாக என்னுநள் போல<br />
முன்னம் காட்டி முகத்தின் உரையா<br />
ஓவச் செய்தியின் ஒன்றுநினைந் தேற்றிப் (20)</p>

<p>பாவை மாய்த்த பனிநீர் நோக்கமொ<br />
டாகத் தொடுக்கிய புதல்வன் புன்றலைத்<br />
தூநீர் பயந்த துணையமை பிணையல்<br />
மோயினள் உயிர்த்த காலை மாமலர்<br />
மணியுரு இழந்த அணியழி தோற்றம் (25)</p>

<p>கண்டே கடிந்தனம் செலவே ஒண்தொடி<br />
உழையம் ஆகவும் இனைவோள்<br />
பிழையலள் மாதோ பிரிதும்நாம் எனினே. (28)</p>

<h2 id="படி-1-சொற்களை-பிரித்து-எழுதுவோம்">படி 1: சொற்களை பிரித்து எழுதுவோம்</h2>

<p>அளி நிலை பொறாஅது அமரிய முகத்தள்<br />
விளி நிலை கேளாள் தமியள் மெல் மெல<br />
நலம் மிகு சேவடி நிலம் வடுக் கொளாஅ<br />
குறுக வந்து தன் கூர் எயிறு தோன்ற<br />
வறிது அகத்து எழுந்த வாயல் முறுவலள் (5)</p>

<p>கண்ணியது உணரா அளவை ஒள் நுதல்<br />
வினை தலைப்படுதல் செல்லா நினைவுடன்<br />
முளிந்த ஓமை முதையல் அம் காட்டு<br />
பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லி<br />
மோட்டு இரும் பாறை ஈட்டு வட்டு ஏய்ப்ப (10)</p>

<p>உதிர்வன படூஉம் கதிர் தெறு கவாஅன்<br />
மாய்த்த போல மழுகு நுனை தோற்றி<br />
பாத்தி அன்ன குடுமிக் கூர்ம் கல்<br />
விரல் நுதி சிதைக்கும் நிரை நிலை அதர<br />
பரன் முரம்பு ஆகிய பயம் இல் கானம் (15)</p>

<p>இறப்ப எண்ணுதிர் ஆயின் அறத்து ஆறு<br />
அன்று என மொழிந்த ஒன்றுபடு கிளவி<br />
அன்ன வாக என்னுநள் போல<br />
முன்னம் காட்டி முகத்தின் உரையா<br />
ஓவச் செய்தியின் ஒன்று நினைந்து ஏற்றி (20)</p>

<p>பாவை மாய்த்த பனி நீர் நோக்கமொடு<br />
ஆகத்து ஒடுக்கிய புதல்வன் புன் தலைத்<br />
தூ நீர் பயந்த துணை அமை பிணையல்<br />
மோயினள் உயிர்த்த காலை மா மலர்<br />
மணி உரு இழந்த அணி அழி தோற்றம் (25)</p>

<p>கண்டே கடிந்தனம் செலவே ஒண் தொடி<br />
உழையம் ஆகவும் இனைவோள்<br />
பிழையலள் மாதோ பிரிதும் நாம் எனினே. (28)</p>

<h2 id="படி-2-சொற்களின்-அர்த்தத்தை-புரிந்து-கொள்வோம்">படி 2: சொற்களின் அர்த்தத்தை புரிந்து கொள்வோம்</h2>

<blockquote>
  <p>அளி நிலை பொறாஅது அமரிய முகத்தள்</p>
</blockquote>

<p><strong>அளி</strong> - அன்பு;
<strong>நிலை</strong> - தன்மை;
<strong>பொறாஅது</strong> - தாங்கமாட்டாமல்;
<strong>அமரிய</strong> - சினந்த;
<strong>முகத்தள்</strong> - முகத்தை உடையவள்;</p>

<p>தலைவன் வழக்கத்தை விட அதிகமாக அன்பு செலுத்த, அதை பொறுக்க முடியாத, கோபமான முகத்தையுடையவள்</p>

<blockquote>
  <p>விளி நிலை கேளாள் தமியள்</p>
</blockquote>

<p><strong>விளி</strong> - அழைக்கும் சத்தம்;
<strong>நிலை</strong> - தன்மை;
<strong>கேளாள்</strong> - கேட்காதவளாய்;
<strong>தமியள்</strong> - தனிமையானவள்;</p>

<p>தலைவன் அழைக்கும் சத்தத்தை கேட்காமல், தனியாக (தூரத்தில்) நிற்பவள்</p>

<blockquote>
  <p>மெல் மெல நலம் மிகு சேவடி நிலம் வடுக் கொளாஅ குறுக வந்து</p>
</blockquote>

<p><strong>மெல் மெல</strong> - மெல்ல மெல்ல;
<strong>நலம் மிகு</strong> - மென்மை மிகுந்த;
<strong>சேவடி</strong> - சிவந்த அடிகள்;
<strong>நிலம்</strong> - தரை;
<strong>வடு</strong> - சுவடு / தழும்பு;
<strong>கொளாஅ</strong> - கொள்ளாதபடி;
<strong>குறுக வந்து</strong> - அருகில் வந்து;</p>

<p>மெல்ல மெல்ல, தன்னுடைய மென்மையான, சிவந்த பாதங்கள் தரையில் சுவடு கூட படாதபடி, தலைவன் அருகில் வந்து</p>

<blockquote>
  <p>தன் கூர் எயிறு தோன்ற வறிது அகத்து எழுந்த வாயல் முறுவலள்</p>
</blockquote>

<p><strong>தன்</strong> - தன்னுடைய;
<strong>கூர்</strong> - கூர்மையான;
<strong>எயிறு</strong> - பற்கள்;
<strong>தோன்ற</strong> - தெரியும்படி;
<strong>வறிது</strong> - மிகச் சிறிய;
<strong>அகத்து</strong> - உள்ளத்தில்;
<strong>எழுந்த</strong> - தோன்றிய;
<strong>வாயல்</strong> - வாய் வழியாக;
<strong>முறுவலள்</strong> - புன்னகை கொண்டவள்;</p>

<p>உள்ளிருக்கும் துயரத்தை மறைத்து, தன்னுடைய கூர்மையான பற்கள் தெரியும்படி, உதட்டளவில் போலியாகப் புன்னைகைப்பவள்.</p>

<blockquote>
  <p>கண்ணியது உணரா அளவை ஒள் நுதல் வினை தலைப்படுதல் செல்லா நினைவுடன்</p>
</blockquote>

<p><strong>கண்ணியது</strong> - கருதியது;
<strong>உணரா</strong> - அறியாத;
<strong>அளவை</strong> - சமயம்;
<strong>ஒள்</strong> - ஒளிமிக்க;
<strong>நுதல்</strong> - நெற்றி;
<strong>வினை</strong> - செயல் (பொருள் ஈட்டும் பயணம்);
<strong>தலைப்படுதல்</strong> - மேற்கொள்ளுதல்;
<strong>செல்லா</strong> - முடியாத;
<strong>நினைவுடன்</strong> - எண்ணத்துடன்;</p>

<p>தலைவன் பொருள் ஈட்டுவதற்காக பிரிந்து செல்ல எண்ணியதை, தலைவி உணரும் முன்பே, ஒளி மிகுந்த நெற்றியுடைய அவளை பிரிந்து செல்ல முடியாத நினைவுடன்</p>

<blockquote>
  <p>முளிந்த ஓமை முதையல் அம் காட்டு</p>
</blockquote>

<p><strong>முளிந்த</strong> - உலர்ந்த;
<strong>ஓமை</strong> - ஓமை மரம்;
<strong>முதையல்</strong> - பழைய;
<strong>அம்</strong> - அந்த;
<strong>காட்டு</strong> - காடு;</p>

<p>காய்ந்த ஓமை மரங்கள் அடர்ந்த அந்த பழைய காட்டில்</p>

<blockquote>
  <p>பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லி மோட்டு இரும் பாறை ஈட்டு வட்டு ஏய்ப்ப உதிர்வன</p>
</blockquote>

<p><strong>பளிங்கத்து அன்ன</strong> - பளிங்கு போன்ற;
<strong>பல்</strong> - பல;
<strong>காய் நெல்லி</strong> - நெல்லிக்காய்;
<strong>மோட்டு</strong> - மேடான;
<strong>இரும் பாறை</strong> - பெரிய / கரிய பாறை;
<strong>ஈட்டு</strong> - சேர்த்த;
<strong>வட்டு</strong> - சூதாடும் உருண்டைகள்;
<strong>ஏய்ப்ப</strong> - போல;
<strong>உதிர்வன</strong> - உதிர்வனவாக;</p>

<p>பளிங்கு போன்ற நெல்லிக்காய்கள், பெரிய பாறையின் மேல் சூதாடும் உருண்டைகள் போல், உதிர்ந்து கிடக்க</p>

<blockquote>
  <p>படூஉம் கதிர் தெறு கவாஅன் மாய்த்த போல மழுகு நுனை தோற்றி</p>
</blockquote>

<p><strong>படூஉம்</strong> - படும்;
<strong>கதிர்</strong> - சூரியக் கதிர்;
<strong>தெறு</strong> - சுடுகின்ற;
<strong>கவாஅன்</strong> - மலைப்பக்கம்;
<strong>மாய்த்த</strong> - வெட்டிய;
<strong>மழுகு</strong> - கோடாரி;
<strong>நுனை</strong> - முனை;
<strong>தோற்றி</strong> - தோன்றுவது;</p>

<p>தகிக்கும் சூரியன் சுடுகின்ற மலைப்பக்கம், வெட்டிய கோடாரி முனை போல் தோன்ற</p>

<blockquote>
  <p>பாத்தி அன்ன குடுமிக் கூர்ம் கல் விரல் நுதி சிதைக்கும் நிரை நிலை அதர பரன் முரம்பு ஆகிய பயம் இல் கானம் இறப்ப எண்ணுதிர்</p>
</blockquote>

<p><strong>பாத்தி அன்ன</strong> - வயல்வெளிகளில் கட்டிய வரப்பு மேடு போல;
<strong>குடுமி கூர்ம் கல்</strong> - கூர்மையான மேல்பாகத்தை கொண்ட கற்கள்;
<strong>விரல்</strong> - கால் விரல்;
<strong>நுதி</strong> - நுனி;
<strong>சிதைக்கும்</strong> - சிதைக்கின்ற;
<strong>நிரை</strong> - வரிசையான;
<strong>நிலை</strong> - நிலம் / அமைப்பு;
<strong>அதர</strong> - வழியினை உடைய;
<strong>பரன்</strong> - மேடு;
<strong>முரம்பு</strong> - பருக்கைக்கல் நிலம்;
<strong>ஆகிய</strong> - ஆகிய;
<strong>பயம் இல் கானம்</strong> - பலன் இல்லாத காடு;
<strong>இறப்ப</strong> - கடந்து செல்ல;
<strong>எண்ணுதிர்</strong> - நினைப்பீர்;</p>

<p>கால் விரல் நுனியை சிதைக்கின்ற, வரப்புப்மேட்டைப் போல் கூர்மையான கற்கள் வரிசையாக நிறைந்த, பருக்கைக்கற்கள் நிரம்பிய மேட்டுநிலமுள்ள, ஒரு பயனுமில்லாத காட்டை கடந்து செல்ல நினைப்பீர்.</p>

<blockquote>
  <p>ஆயின் அறத்து ஆறு அன்று என மொழிந்த ஒன்றுபடு கிளவி அன்ன வாக என்னுநள் போல முன்னம் காட்டி</p>
</blockquote>

<p><strong>ஆயின்</strong> - ஆனால்;
<strong>அறத்து</strong> - தர்மத்தின் (இல்லற தர்மத்தின்);
<strong>ஆறு</strong> - வழி;
<strong>அன்று என</strong> - இல்லை என்று;
<strong>மொழிந்த</strong> - சொல்லப்பட்ட;
<strong>ஒன்றுபடு</strong> - பொருத்தமான;
<strong>கிளவி</strong> - வார்த்தை / அறிவுரை;
<strong>அன்ன</strong> - போன்ற;
<strong>வாக</strong> - ஆக;
<strong>என்னுநள் போல</strong> - நினைப்பவள் போல;
<strong>முன்னம் காட்டி</strong> - குறிப்பு காண்பித்து;</p>

<p>ஆனால், “நீங்கள் பிரிந்து செல்வது, இல்லற தர்மத்தின் வழி இல்லை” என்று சொல்லப்பட்ட அறிவுரையை, குறிப்பால் உணர்த்துவது போல</p>

<blockquote>
  <p>முகத்தின் உரையா ஓவச் செய்தியின் ஒன்று நினைந்து ஏற்றி பாவை மாய்த்த பனி நீர் நோக்கமொடு</p>
</blockquote>

<p><strong>முகத்தின்</strong> - முகத்தினால்;
<strong>உரையா</strong> - பேசாமல்;
<strong>ஓவச்</strong> - ஓவியம்;
<strong>செய்தியின்</strong> - தன்மையுடன்;
<strong>ஒன்று</strong> - ஒன்றை;
<strong>நினைந்து</strong> - எண்ணி;
<strong>ஏற்றி</strong> - கொண்டு;
<strong>பாவை</strong> - கண் பாவை;
<strong>மாய்த்த</strong> - மறைத்த;
<strong>பனி</strong> - கண்ணீர்;
<strong>நீர்</strong> - நீர்;
<strong>நோக்கமொடு</strong> - பார்வையுடன்;</p>

<p>முகத்தினால் பேசாமல் (அதாவது வார்த்தைகளால் பேசாமல்), கருவிழியை மறைக்கும் அளவுக்கு கண்ணீர் நிறைந்த பார்வையுடன், ஒரு ஓவியம் போல தன் உணர்வுகளை வெளிப்படுத்துகிறாள்</p>

<blockquote>
  <p>ஆகத்து ஒடுக்கிய புதல்வன் புன் தலைத் தூ நீர் பயந்த துணை அமை பிணையல் மோயினள்</p>
</blockquote>

<p><strong>ஆகத்து</strong> - மார்பில்;
<strong>ஒடுக்கிய</strong> - அணைத்த;
<strong>புதல்வன்</strong> - மகன்;
<strong>புன் தலை</strong> - மென்மையான / சிறிய தலை;
<strong>தூ நீர் பயந்த</strong> - தூய்மையான அழகு தந்த;
<strong>துணை அமை</strong> - இணை பொருந்திய;
<strong>பிணையல்</strong> - மாலை;
<strong>மோயினள்</strong> - மோந்து பார்த்தாள்;</p>

<p>தன் மார்பில் அணைத்த மகனின், மென்மையான தலையில், அவன் அழகுக்கு இணையாக சூடியிருந்த மாலையை, முகர்ந்து பொழுது</p>

<blockquote>
  <p>உயிர்த்த காலை மா மலர் மணி உரு இழந்த அணி அழி தோற்றம்</p>
</blockquote>

<p><strong>உயிர்த்த</strong> - பூத்த;
<strong>காலை</strong> - பொழுது;
<strong>மா மலர்</strong> - பெரிய பூ;
<strong>மணி</strong> - நீலமணி போன்ற;
<strong>உரு</strong> - நிறம்;
<strong>இழந்த</strong> - நீங்கிய;
<strong>அணி</strong> - அழகு;
<strong>அழி</strong> - சிதைந்த;
<strong>தோற்றம்</strong> - காட்சி;</p>

<p>காலையில் பூத்த நீலமணி போன்ற பெரிய மலர்கள், (தலைவியின் பெருமூச்சு பட்டவுடன்) அழகு சிதைந்து வாடிய காட்சியை</p>

<blockquote>
  <p>கண்டே கடிந்தனம் செலவே</p>
</blockquote>

<p><strong>கண்டே</strong> - பார்த்தவுடனேயே;
<strong>கடிந்தனம்</strong> - தடுத்தோம்;
<strong>செலவே</strong> - பயணத்தை;</p>

<p>பார்த்தவுடனேயே தவிர்த்தோம், பொருள் தேடச் சொல்லும் பயணத்தை</p>

<blockquote>
  <p>ஒண் தொடி உழையம் ஆகவும் இனைவோள்</p>
</blockquote>

<p><strong>ஒண்</strong> - ஒளிமிக்க;
<strong>தொடி</strong> - வளையல்;
<strong>உழையம்</strong> - அருகிலேயே;
<strong>ஆகவும்</strong> - இருந்தும்;
<strong>இனைவோள்</strong> - வருந்துபவள்;</p>

<p>பிரகாசமான வளையல்களை அணிந்தவள், நான் அருகிலேயே இருக்கும்போதே இவ்வளவு வருந்துபவள்</p>

<blockquote>
  <p>பிழையலள் மாதோ பிரிதும் நாம் எனினே</p>
</blockquote>

<p><strong>பிழையலள்</strong> - உயிர் வாழமாட்டாள்;
<strong>மாதோ</strong> - அசைச்சொல்;
<strong>பிரிதும்</strong> - பிரிவோம்;
<strong>நாம்</strong> - நாம்;
<strong>எனினே</strong> - என்றால்.</p>

<p>நான் உண்மையாகவே பிரிந்து சென்றால் உயிர் பிழைக்கமாட்டாள்</p>

<h2 id="படி-3-பாடலின்-பொருள்-மட்டும்---எளிமையாக">படி 3: பாடலின் பொருள் மட்டும் - எளிமையாக</h2>

<p>தலைவன் வழக்கத்தை விட அதிகமாக அன்பு செலுத்த, அதை பொறுக்க முடியாத, கோபமான முகத்தையுடையவள்.</p>

<p>தலைவன் அழைக்கும் சத்தத்தை கேட்காமல், தனியாக (தூரத்தில்) நிற்பவள்.</p>

<p>மெல்ல மெல்ல, தன்னுடைய மென்மையான, சிவந்த பாதங்கள் தரையில் சுவடு கூட படாதபடி, தலைவன் அருகில் வந்து, உள்ளிருக்கும் துயரத்தை மறைத்து, தன்னுடைய கூர்மையான பற்கள் தெரியும்படி, உதட்டளவில் போலியாகப் புன்னைகைப்பவள்.</p>

<p>தலைவன் பொருள் ஈட்டுவதற்காக பிரிந்து செல்ல எண்ணியதை, தலைவி உணரும் முன்பே, ஒளி மிகுந்த நெற்றியுடைய அவளை பிரிந்து செல்ல முடியாத நினைவுடன் -</p>

<p>காய்ந்த ஓமை மரங்கள் அடர்ந்த அந்த பழைய காட்டில், பளிங்கு போன்ற நெல்லிக்காய்கள், பெரிய பாறையின் மேல் சூதாடும் உருண்டைகள் போல், உதிர்ந்து கிடக்க, தகிக்கும் சூரியன் சுடுகின்ற மலைப்பக்கம், வெட்டிய கோடாரி முனை போல் தோன்ற, கால் விரல் நுனியை சிதைக்கின்ற, வரப்புப்மேட்டைப் போல் கூர்மையான கற்கள் வரிசையாக நிறைந்த, பருக்கைக்கற்கள் நிரம்பிய மேட்டுநிலமுள்ள, ஒரு பயனுமில்லாத காட்டை கடந்து செல்ல நினைப்பீர்.</p>

<p>ஆனால், “நீங்கள் பிரிந்து செல்வது, இல்லற தர்மத்தின் வழி இல்லை” என்று சொல்லப்பட்ட அறிவுரையை, குறிப்பால் உணர்த்துவது போல, முகத்தினால் பேசாமல் (அதாவது வார்த்தைகளால் பேசாமல்),  கருவிழியை மறைக்கும் அளவுக்கு கண்ணீர் நிறைந்த பார்வையுடன், ஒரு ஓவியம் போல தன் உணர்வுகளை வெளிப்படுத்துகிறாள்.</p>

<p>தன் மார்பில் அணைத்த மகனின், மென்மையான தலையில், அவன் அழகுக்கு இணையாக சூடியிருந்த மாலையை, முகர்ந்து பொழுது, காலையில் பூத்த நீலமணி போன்ற பெரிய மலர்கள், (தலைவியின் பெருமூச்சு பட்டவுடன்) அழகு சிதைந்து வாடிய காட்சியை பார்த்தவுடனேயே தவிர்த்தோம், பொருள் தேடச் சொல்லும் பயணத்தை.</p>

<p>பிரகாசமான வளையல்களை அணிந்தவள், நான் அருகிலேயே இருக்கும்போதே இவ்வளவு வருந்துபவள், நான் உண்மையாகவே பிரிந்து சென்றால் உயிர் பிழைக்கமாட்டாள்</p>

<h2 id="படி-4-பாடலை-பற்றிய-என்-கருத்துக்கள்">படி 4: பாடலை பற்றிய என் கருத்துக்கள்</h2>

<p>தலைவி ஒரு வார்த்தை கூட பேசாமல், தன் உணர்ச்சிகளை தலைவனுக்கு வெளிப்படுத்தி, அவனுடைய பயணத்தை அவனே தவிர்க்கும்படி செய்கிறாள். கல் தோன்றி மண் தோன்றா காலத்திலிருந்தே இது தான் வழக்கம் - சிறப்பு :)</p>

<p>வழக்கம் போல், பாலை நிலத்தை பற்றிய விவரிப்புகள்.</p>

<p>எனக்கு பிடித்த இரண்டு சொல்லாடல்கள் இதோ:</p>

<p><strong>ஓவச் செய்தி (ஓவியத்தின் செய்தி)</strong> - பிரிவுணர்த்த சொற்கள் தேவையில்லை; அவள் முகமே ஆயிரமாயிரம் செய்திகளை ஒரு ஓவியம் போல் குறிப்பால் உணர்த்தும். எனக்கு மிகவும் பிடித்த உவமை.</p>

<p><strong>மகனின் மாலையை முகர்தல்</strong> - தன் மகன் அணிந்துள்ள மாலையை முகர்ந்தவுடன், அவள் பெருமூச்சு பட்டு, அந்த பூக்கள் வாடி போகின்றன. இதை பார்த்தவுடனே தலைவன் தன்னுடைய பயணத்தை தவிர்க்கிறான். தலைவன், தலைவி, பயணம், பிரிவு என எதற்கும் சம்மந்தமில்லாத ஒரு செயலை செய்து, அதன் மூலம் தலைவனுக்கு குறிப்பால் உணர்த்துகிறாள் (ஓவியச் செய்தி).</p>
]]></description>
				
					<author><![CDATA[ (பிரேம்குமார் மாசிலாமணி)]]></author>
				
				<category><![CDATA[]]></category>
				<pubDate>Mon, 06 Apr 2026 00:00:00 +0530</pubDate>
				<guid isPermaLink="true">https://www.premkumarmasilamani.com/tamil/a400/005-ali-nilai-pora/</guid>
			</item>
		
			<item>
				<title><![CDATA[004 - முல்லை வைந்நுனை]]></title>
				<link><![CDATA[https://www.premkumarmasilamani.com/tamil/a400/004-mullai-vai-nunai/]]></link>
				<description><![CDATA[<table>
  <tbody>
    <tr>
      <td><strong>நூல்</strong></td>
      <td>அகநானூறு</td>
    </tr>
    <tr>
      <td><strong>பாடல்</strong></td>
      <td>004 - முல்லை வைந்நுனை</td>
    </tr>
    <tr>
      <td><strong>பாடியவர்</strong></td>
      <td>குறுங்குடி மருதனார்</td>
    </tr>
    <tr>
      <td><strong>திணை</strong></td>
      <td>முல்லை</td>
    </tr>
    <tr>
      <td><strong>துறை</strong></td>
      <td>தன்னைப் பிரிந்து சென்ற தலைவனை நினைத்து வாடும் தலைவியை நோக்கி, ‘கார்காலம் வந்துவிட்டது தலைவன் விரைவில் வந்து விடுவான்’ என்று, பருவ காலத்தைச் சுட்டிக் காட்டி ஆற்றுவிக்கும் தோழி</td>
    </tr>
  </tbody>
</table>

<p>முல்லை வைந்நுனை தோன்ற வில்லமொடு <br />
பைங்காற் கொன்றை மென்பிணி யவிழ <br />
விரும்புதிரித் தன்ன மாயிரு மருப்பிற் <br />
பரலவ லடைய விரலை தெறிப்ப <br />
மலர்ந்த ஞாலம் புலம்புபுறக் கொடுப்பக் (5)</p>

<p>கருவி வானங் கதழுறை சிதறிக் <br />
கார்செய் தன்றே கவின்பெறு கானங் <br />
குரங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி <br />
நரம்பார்த் தன்ன வாங்குவள் பரியப் <br />
பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த (10)</p>

<p>தாதுண் பறவை பேதுற லஞ்சி <br />
மணிநா வார்த்த மாண்வினைத் தேர <br />
னுவக்காண் டோன்றுங் குறும்பொறை நாடன் <br />
கறங்கிசை விழவி னுறந்தைக் குணாது <br />
நெடும்பெருங் குன்றத் தமன்ற காந்தட் (15)</p>

<p>போதவி ழலரி னாறு <br />
மாய்தொடி யரிவைநின் மாணலம் படர்ந்தே. (17)</p>

<h2 id="படி-1-சொற்களை-பிரித்து-எழுதுவோம்">படி 1: சொற்களை பிரித்து எழுதுவோம்</h2>

<p>முல்லை வை  நுனை தோன்ற வில்லமொடு <br />
பைம் கால் கொன்றை மென் பிணி அவிழ <br />
விரும்பு திரித்தன்ன மா இரு மருப்பின் <br />
பரல் அவல் அடைய இரலை தெறிப்ப <br />
மலர்ந்த ஞாலம் புலம்பு புறக்கொடுப்ப (5)</p>

<p>கருவி வானம் கதழ் உறை சிதறி <br />
கார் செய்தன்றே கவின் பெறு கானம் <br />
குரங்கு உளை பொலிந்த கொய் சுவல் புரவி <br />
நரம்பு ஆர்த்தன்ன வாங்கு வள் பரிய <br />
பூத்த பொங்கர் துணையொடு வதிந்த (10)</p>

<p>தாது உண் பறவை பேதுறல் அஞ்சி <br />
மணி நா ஆர்த்த மாண் வினை தேரன் <br />
நுவ காண் தோன்றும் குறும் பொறை நாடன் <br />
கறங்கு இசை விழவின் உறந்தை குணாது <br />
நெடும் பெரும் குன்றத்து அமன்ற காந்தள் (15)</p>

<p>போது அவிழ் அலரின் நாறும் <br />
மாய்தொடி யரிவைநின் மாணலம் படர்ந்தே. (17)</p>

<h2 id="படி-2-சொற்களின்-அர்த்தத்தை-புரிந்து-கொள்வோம்">படி 2: சொற்களின் அர்த்தத்தை புரிந்து கொள்வோம்</h2>

<blockquote>
  <p>முல்லை வை  நுனை தோன்ற வில்லமொடு</p>
</blockquote>

<p><strong>முல்லை</strong> - முல்லை மலர்;
<strong>வை</strong> - கூர்மையான;
<strong>நுனை</strong> - நுனி (இங்கே அரும்பு);
<strong>தோன்ற</strong> - காணப்பட;
<strong>வில்லமொடு</strong> - முல்லைக் கொடிகளுடன்;</p>

<p>முல்லைக் கொடிகளுடன், கூர்மையான நுனிகளைக் கொண்ட முல்லை அரும்புகள் தோன்றும்படியாக</p>

<blockquote>
  <p>பைம் கால் கொன்றை மென் பிணி அவிழ</p>
</blockquote>

<p><strong>பைம்</strong> - பசுமையான;
<strong>கால்</strong> - தண்டு / அடிமரம்;
<strong>கொன்றை</strong> - கொன்றை மரம்;
<strong>மென்</strong> - மென்மையான;
<strong>பிணி</strong> - கட்டு (இங்கே அரும்பு);
<strong>அவிழ</strong> - மலர;</p>

<p>பசுமையான அடிமரத்தையுடைய கொன்றை மரத்தின் மென்மையான அரும்புகள் மலரும்படியாக</p>

<blockquote>
  <p>விரும்பு திரித்தன்ன மா இரு மருப்பின்</p>
</blockquote>

<p><strong>விரும்பு</strong> - இரும்பு;
<strong>திரித்தன்ன</strong> - முறுக்கியதைப் போன்ற;
<strong>மா</strong> - பெரிய;
<strong>இரு</strong> - கரிய;
<strong>மருப்பின்</strong> - கொம்புகளையுடைய ஆண் மான்கள்;</p>

<p>இரும்பை முறுக்கியதைப் போன்ற, பெரியதும் கரியதுமான கொம்புகளை உடைய ஆண் மான்கள்</p>

<blockquote>
  <p>பரல் அவல் அடைய இரலை தெறிப்ப</p>
</blockquote>

<p><strong>பரல்</strong> - சிறு கற்கள்;
<strong>அவல்</strong> - பள்ளமான இடம்;
<strong>அடைய</strong> - முழுவதும்;
<strong>இரலை</strong> - ஆண் மான்;
<strong>தெறிப்ப</strong> - துள்ளி ஓட;</p>

<p>சிறு கற்களையுடைய பள்ளமான நிலம் முழுதும் ஆண் மான்கள் துள்ளி ஓடும்படியாக</p>

<blockquote>
  <p>மலர்ந்த ஞாலம் புலம்பு புறக்கொடுப்ப</p>
</blockquote>

<p><strong>மலர்ந்த</strong> - பரந்து விரிந்த;
<strong>ஞாலம்</strong> - உலகம்;
<strong>புலம்பு</strong> - தனிமைத் துன்பம்;
<strong>புறக்கொடுப்ப</strong> - நீக்க;</p>

<p>பரந்து விரிந்த இவ்வுலகம் தனது தனிமைத் துன்பம் நீங்கும்படியாக</p>

<blockquote>
  <p>கருவி வானம் கதழ் உறை சிதறி</p>
</blockquote>

<p><strong>கருவி</strong> - தொகுதி (இடி, மின்னல், மேகம் சேர்ந்த தொகுதி);
<strong>வானம்</strong> - மேகம்;
<strong>கதழ்</strong> - விரைவான;
<strong>உறை</strong> - மழைத்துளி;
<strong>சிதறி</strong> - தூவி;</p>

<p>இடி, மின்னல், மேகம் சேர்ந்த தொகுதியான மேகங்கள், விரைவான மழைத்துளிகளைத் தூவி</p>

<blockquote>
  <p>கார் செய்தன்றே கவின் பெறு கானம்</p>
</blockquote>

<p><strong>கார்</strong> - மழைக்காலம்;
<strong>செய்தன்று</strong> - உண்டாக்கிவிட்டது;
<strong>கவின்</strong> - அழகு;
<strong>பெறு</strong> - பெற்ற;
<strong>கானம்</strong> - காடு;</p>

<p>அழகிய காடானது கார்காலக் கோலத்தை அடைந்துவிட்டது</p>

<blockquote>
  <p>குரங்கு உளை பொலிந்த கொய் சுவல் புரவி</p>
</blockquote>

<p><strong>குரங்கு</strong> - வளைந்த;
<strong>உளை</strong> - பிடரி மயிர்;
<strong>பொலிந்த</strong> - கொண்ட;
<strong>கொய்</strong> - கத்தரிக்கப்பட்ட;
<strong>சுவல்</strong> - பிடரி;
<strong>புரவி</strong> - குதிரை;</p>

<p>வளைந்த பிடரி மயிர் கொண்ட, கத்தரிக்கப்பட்ட பிடரியினை உடைய குதிரைகள்</p>

<blockquote>
  <p>நரம்பு ஆர்த்தன்ன வாங்கு வள் பரிய</p>
</blockquote>

<p><strong>நரம்பு</strong> - யாழ் நரம்பு;
<strong>ஆர்த்தன்ன</strong> - கட்டியது போன்ற;
<strong>வாங்கு</strong> - வளைந்த;
<strong>வள்</strong> - கடிவாளம்;
<strong>பரிய</strong> - ஓட</p>

<p>யாழ் நரம்பைக் கட்டினாற் போன்ற, வாரினால் இறுக்கப்பட்ட வளைந்த கடிவாளத்தையுடைய குதிரைகள் விரைந்து ஓட</p>

<blockquote>
  <p>பூத்த பொங்கர் துணையொடு வதிந்த</p>
</blockquote>

<p><strong>பூத்த</strong> - மலர்ந்த;
<strong>பொங்கர்</strong> - மரக்கிளை;
<strong>துணையொடு</strong> - தன் இணையுடன்;
<strong>வதிந்த</strong> - தங்கியிருந்த;</p>

<p>மலர்ந்த மரக்கிளையிலே தன் இணையுடன் தங்கியிருந்த</p>

<blockquote>
  <p>தாது உண் பறவை பேதுறல் அஞ்சி</p>
</blockquote>

<p><strong>தாது</strong> - பூந்தேன் / மகரந்தம்;
<strong>உண்</strong> - உண்ணும்;
<strong>பறவை</strong> - பறவைகள்;
<strong>பேதுறல்</strong> - கலங்குதல்;
<strong>அஞ்சி</strong> - பயந்து;</p>

<p>பூந்தேனை உண்ணும் பறவைகள் கலங்கி பயந்து</p>

<blockquote>
  <p>மணி நா ஆர்த்த மாண் வினை தேரன்</p>
</blockquote>

<p><strong>மணி</strong> - தேர் மணி;
<strong>நா</strong> - நாக்கு;
<strong>ஆர்த்த</strong> - கட்டிய;
<strong>மாண்</strong> - சிறந்த;
<strong>வினை</strong> - வேலைப்பாடு;
<strong>தேரன்</strong> - தேரை உடையவன்;</p>

<p>தேர்மணியின் நாவைக் கட்டிய, சிறந்த வேலைப்பாட்டையுடைய தேரினை உடையவன்</p>

<blockquote>
  <p>நுவ காண் தோன்றும் குறும் பொறை நாடன்</p>
</blockquote>

<p><strong>நுவ</strong> - அதோ;
<strong>காண்</strong> - பார்;
<strong>தோன்றும்</strong> - தெரிகின்றான்;
<strong>குறும்</strong> - சிறிய;
<strong>பொறை</strong> - குன்று / மலை;
<strong>நாடன்</strong> - நாட்டையுடையவன் (தலைவன்);</p>

<p>அதோ பார், தோன்றுகின்றான், சிறிய குன்றுகளையுடைய நாட்டின் தலைவன்</p>

<blockquote>
  <p>கறங்கு இசை விழவின் உறந்தை குணாது</p>
</blockquote>

<p><strong>கறங்கு</strong> - சுழலும், ஒலிக்கும், ஆரவாரமான;
<strong>இசை</strong> - ஓசை;
<strong>விழவின்</strong> - திருவிழாவையுடைய;
<strong>உறந்தை</strong> - உறையூர்;
<strong>குணாது</strong> - கிழக்குப் பக்கத்தில்;</p>

<p>சுழலும், ஒலிக்கும், ஆரவாரமான இசை மிகுந்த திருவிழாக்களையுடைய உறையூரின் கிழக்குப் பக்கத்தில் உள்ள</p>

<blockquote>
  <p>நெடும் பெரும் குன்றத்து அமன்ற காந்தள்</p>
</blockquote>

<p><strong>நெடும்</strong> - நீண்ட / உயர்ந்த;
<strong>பெரும்</strong> - பெரிய;
<strong>குன்றத்து</strong> - மலையில்;
<strong>அமன்ற</strong> - செறிந்து வளர்ந்த;
<strong>காந்தள்</strong> - காந்தள் மலர்;</p>

<p>நீண்ட பெரிய மலையில் செறிந்து வளர்ந்த காந்தள் மலர்களினது</p>

<blockquote>
  <p>போது அவிழ் அலரின் நாறும்</p>
</blockquote>

<p><strong>போது</strong> - அரும்பு;
<strong>அவிழ்</strong> - மலர்கின்ற;
<strong>அலரின்</strong> - மலர்களைப் போல;
<strong>நாறும்</strong> - மணம் வீசுகின்ற;</p>

<p>அரும்புகள் மலர்கின்ற பூக்களைப் போல மணம் வீசும்</p>

<blockquote>
  <p>மாய் தொடி அரிவை நின் மாண் நலம் படர்ந்தே.</p>
</blockquote>

<p><strong>மாய்</strong> - ஒளிரும்;
<strong>தொடி</strong> - வளையல்;
<strong>அரிவை</strong> - பெண்ணே;
<strong>நின்</strong> - உன்னுடைய;
<strong>மாண்</strong> - சிறந்த;
<strong>நலம்</strong> - அழகு;
<strong>படர்ந்தே</strong> - நினைத்தே / கருதியே (வந்தான்);</p>

<p>சிறந்த வளையல்களை அணிந்த பெண்ணே, உன்னுடைய சிறந்த அழகை நினைத்து (அவன் வருவான்)</p>

<h2 id="படி-3-பாடலின்-பொருள்-மட்டும்---எளிமையாக">படி 3: பாடலின் பொருள் மட்டும் - எளிமையாக</h2>

<p>முல்லைக் கொடிகளுடன் கூர்மையான நுனிகளையுடைய முல்லை அரும்புகள் தோன்றவும், பசுமையான அடிமரத்தினையுடைய கொன்றை மரத்தின் மென்மையான அரும்புகள் மலரவும், இரும்பைத் திரித்தாற் போன்ற பெரிய கரிய கொம்புகளையுடைய ஆண் மான்கள், சிறு கற்களையுடைய பள்ளமான நிலத்தில் துள்ளி ஓடவும், அதனால் இந்த விரிந்த உலகம் தன் தனிமைத் துயர் நீங்கவும், இடி, மின்னல், மேகம் சேர்ந்த தொகுதியான மேகங்கள் விரைவான மழைத்துளிகளைச் சிதறி, அழகிய காடானது கார்காலக் கோலத்தை அடைந்துவிட்டது.</p>

<p>வளைந்த பிடரி மயிர் கொண்ட, கத்தரிக்கப்பட்ட பிடரியினையுடைய, யாழ் நரம்பைக் கட்டினாற்போன்ற வாரினால் இறுக்கப்பட்ட கடிவாளத்தையுடைய குதிரைகள், பூத்த மரக்கிளைகளில் தம் துணையுடன் தங்கியிருக்கும் தேனுண்ணும் பறவைகள் அஞ்சிக் கலங்குவதற்குப் பயந்து (மெல்ல) ஓட, (அதனால்) மணியின் நாவைக் கட்டிய, சிறந்த வேலைப்பாடமைந்த தேரினை உடையவனும், சிறிய குன்றுகளையுடைய நாட்டின் தலைவனுமாகிய அவன், அதோ தோன்றுகின்றான்.</p>

<p>சிறந்த வளையல்களை அணிந்த பெண்ணே! சுழலும், ஒலிக்கும், ஆரவாரமான இசை மிகுந்த திருவிழாக்களையுடைய உறையூரின் கிழக்குப் பக்கத்தில் உள்ள நெடிய பெரிய குன்றில், செறிந்து வளர்ந்த காந்தள் மலரின் அரும்புகள் மலர்ந்த பூவைப் போல மணம் வீசும் உனது சிறந்த அழகை நினைத்து அவன் வருவான்.</p>

<h2 id="படி-4-பாடலை-பற்றிய-என்-கருத்துக்கள்">படி 4: பாடலை பற்றிய என் கருத்துக்கள்</h2>

<p>மற்ற பாடல்களை போன்றே, குறிஞ்சி நிலத்தின் பெருமைகளை சொல்லி, மழைக்காலத்தின் நிகழ்வுகளை செல்லி, தோழி தலைவியை தேற்றுகிற பாடல். எனக்கு பிடித்திருக்கிறது.</p>
]]></description>
				
					<author><![CDATA[ (பிரேம்குமார் மாசிலாமணி)]]></author>
				
				<category><![CDATA[]]></category>
				<pubDate>Sun, 05 Oct 2025 00:00:00 +0530</pubDate>
				<guid isPermaLink="true">https://www.premkumarmasilamani.com/tamil/a400/004-mullai-vai-nunai/</guid>
			</item>
		
			<item>
				<title><![CDATA[003 - இருங்கழி முதலை]]></title>
				<link><![CDATA[https://www.premkumarmasilamani.com/tamil/a400/003-irungazhi-mudhalai/]]></link>
				<description><![CDATA[<table>
  <tbody>
    <tr>
      <td><strong>நூல்</strong></td>
      <td>அகநானூறு</td>
    </tr>
    <tr>
      <td><strong>பாடல்</strong></td>
      <td>003 - இருங்கழி முதலை</td>
    </tr>
    <tr>
      <td><strong>பாடியவர்</strong></td>
      <td>இளங்கீரனார்</td>
    </tr>
    <tr>
      <td><strong>திணை</strong></td>
      <td>பாலை</td>
    </tr>
    <tr>
      <td><strong>துறை</strong></td>
      <td>தலைவனின் நெஞ்சம் தலைவிக்காக பொருள் சேர்க்க தொலைதூரம் செல்ல சொல்லும் போது, தலைவன் தன் நெஞ்சிடம் சொல்லியது</td>
    </tr>
  </tbody>
</table>

<p>இருங்கழி முதலை மேஎந்தோ லன்ன <br />
கருங்கா லோமைக் காண்பிற் பெருஞ்சினைக் <br />
கடியுடை நனந்தலை யீன்றிளைப் பட்ட <br />
கொடுவாய்ப் பேடைக் கல்கிரை தரீஇய <br />
மான்றுவேட் டெழுந்த செஞ்செவி யெருவை (5)</p>

<p>வான்றோய் சிமைய விறல்வரைக் கவாஅற் <br />
றுளங்குநடை மரையா வலம்படத் தொலைச்சி <br />
யொண்செங் குருதி யுவறியுண் டருந்துபு <br />
புலவுப்புலி துறந்த கலவுக்கழி கடுமுடை <br />
கொள்ளை மாந்தரி னானாது கவரும் (10)</p>

<p>புல்லிலை மராஅத்த வகன்சே ணத்தங் <br />
கலந்தர லுள்ளமொடு கழியக் காட்டிப் <br />
பின்னின்று துரக்கு நெஞ்ச நின்வா <br />
வாய்போற் பொய்ம்மொழி யெவ்வமென் களைமா <br />
கவிரித ழன்ன காண்பின் செவ்வா (15)</p>

<p>யந்தீங் கிளவி யாயிழை மடந்தை <br />
கொடுங்குழைக் கமர்த்த நோக்க <br />
நெடுஞ்சே ணாரிடை விலங்கு ஞான்றே. (18)</p>

<h2 id="படி-1-சொற்களை-பிரித்து-எழுதுவோம்">படி 1: சொற்களை பிரித்து எழுதுவோம்</h2>

<p>இருங்கழி முதலை மேஎந்தோல் அன்ன <br />
கருங்கால் ஓமை காண்பின் பெரும் சினை <br />
கடிஉடை நனந்தலை ஈன்று இளைப்பட்ட <br />
கொடுவாய் பேடைக்கு அல்கிரை தரீஇய <br />
மான்று வேட்டு எழுந்த செஞ்செவி எருவை (5)</p>

<p>வான் தொய் சிமை விறல்வரைக் காவல் அற் <br />
உளங்கு நடை மரை ஆ வலம்பட தொலைச்சி <br />
ஒள் செம் குருதி உவறி உண்டு அருந்துபு <br />
புலவு புலி துறந்த கலவு கழி கடு முடை <br />
கொள்ளை மாந்தரின் ஆனாது கவரும் (10)</p>

<p>புல் இலை மரா அத்த அகல் சேண் அத்தம் <br />
கலந்தரல் உள்ளமொடு கழியக் காட்டிப் <br />
பின் நின்று துரக்கு நெஞ்ச நின் வா <br />
வாய் போல் பொய் மொழி எவ்வம் என் களைமா <br />
கவிர் இதழ் அன்ன காண்பின் செவ்வா (15)</p>

<p>அம் தீம் கிளவி ஆய் இழை மடந்தை <br />
கொடும் குழைக்கு அமர்த்த நோக்க <br />
நெடும் சேண் ஆர் இடை விலங்கு ஞான்றே. (18)</p>

<h2 id="படி-2-சொற்களின்-அர்த்தத்தை-புரிந்து-கொள்வோம்">படி 2: சொற்களின் அர்த்தத்தை புரிந்து கொள்வோம்</h2>

<blockquote>
  <p>இருங்கழி முதலை மேஎந்தோல் அன்ன</p>
</blockquote>

<p><strong>இருங்கழி</strong> - (இரு + கழி) - இரண்டு பெரிய உப்பளங்கள்;
<strong>மேஎம் தோல்</strong> - (மேல் + தோல்) - உடம்பின் தோல்;
<strong>அன்ன</strong> - போன்ற;</p>

<p>பெரிய உப்பளங்களில் வாழும் முதலையின் மேல் தோலை போன்ற</p>

<blockquote>
  <p>கருங்கால் ஓமை காண்பின் பெரும் சினை</p>
</blockquote>

<p><strong>கருங்கால்</strong> - (கருமை + கால்) - கருத்த கால்களை போன்ற அடிமரத்தையுடைய;
<strong>ஓமை</strong> - ஓமை மரம். உகாமரம் என்று அழைக்கப்படும் ஒரு பாலைவன மரம்;
<strong>காண்பின்</strong> - காணும் + பின், கண்டால்;
<strong>பெரும் சினை</strong> - (பெரிய + சினை) - பெரிய கிளை;</p>

<p>கருத்த அடிமரத்தையுடைய ஓமை மரத்தை கண்டால், பெரிய கிளையில்</p>

<blockquote>
  <p>கடிஉடை நனந்தலை ஈன்று இளைப்பட்ட</p>
</blockquote>

<p><strong>கடி உடை</strong> - (கடி + உடை) - காவல் உடைய, பாதுகாப்பான;
<strong>நனம் தலை</strong> - (நனம் + தலை) - அகன்ற இடம்;
<strong>ஈன்று</strong> - குஞ்சு பொரித்து;
<strong>இளைப்பட்ட</strong> - (இளைப்பு + பட்ட) - சோர்வடைந்த</p>

<p>பாதுகாப்பான, அகன்ற இடத்தில் குஞ்சு பொரித்து சோர்வடைந்திருந்த</p>

<blockquote>
  <p>கொடுவாய் பேடைக்கு அல்கிரை தரீஇய</p>
</blockquote>

<p><strong>கொடு வாய்</strong> - (கொடுமை + வாய்) - வளைந்த அலகினையுடைய;
<strong>பேடைக்கு</strong> - பெண் பறவைக்கு;
<strong>அல்கிரை</strong> - (அல் + இரை) - தகுந்த உணவு;
<strong>தரீஇய</strong> - (தர) - கொடுப்பதற்காக;</p>

<p>வளைந்த அலகினையுடைய பெண் பறவைக்கு தகுந்த உணவு கொடுப்பதற்காக</p>

<blockquote>
  <p>மான்று வேட்டு எழுந்த செஞ்செவி எருவை</p>
</blockquote>

<p><strong>மான்று</strong> - இருளோடு கலந்து, இருட்டிக்கொண்டு. மாலை நேரம்;
<strong>வேட்டு</strong> - வேட்டைக்கு;
<strong>எழுந்த</strong> - புறப்பட்ட;
<strong>செஞ்செவி</strong> - (செம்மை + செவி) - சிவந்த காதுகளையுடைய;
<strong>எருவை</strong> - ஆண் கழுகு;</p>

<p>மாலை நேரத்தில் வேட்டைக்கு புறப்பட்ட சிவந்த காதுகளையுடைய ஆண் கழுகு</p>

<blockquote>
  <p>வான் தொய் சிமை விறல்வரைக் காவல் அற்</p>
</blockquote>

<p><strong>வான் தோய்</strong> - (வானம் + தோய்) - வானத்தைத் தொடும்;
<strong>சிமைய</strong> - சிகரத்தையுடைய;
<strong>விறல் வரை</strong> - (விறல் + வரை) - பெரிய மலையின்;
<strong>கவாஅன்</strong> - (கவான்) - மலைப்பக்கத்தில்;</p>

<p>வானத்தைத் தொடும் சிகரத்தையுடைய பெரிய மலையின் பக்கத்தில்</p>

<blockquote>
  <p>உளங்கு நடை மரை ஆ வலம்பட தொலைச்சி</p>
</blockquote>

<p><strong>துளங்கு நடை</strong> - அசைந்த நடையையுடைய;
<strong>மரையா</strong> - மரைமான். தமிழகத்தில் இருந்த ஒருவகை மான் இனம்;
<strong>வலம் பட</strong> - வெற்றி கொண்டு;
<strong>தொலைச்சி</strong> - கொன்று</p>

<p>அசைந்த நடையையுடைய மரைமானை வெற்றிகொண்டு கொன்று</p>

<blockquote>
  <p>ஒள் செம் குருதி உவறி உண்டு அருந்துபு</p>
</blockquote>

<p><strong>ஒள் செம் குருதி</strong> - (ஒண்மை + செம்மை + குருதி) - ஒளிமிக்க சிவந்த இரத்தம்;
<strong>உவறி</strong> - மேலெழுந்து வழிய;
<strong>உண்டு</strong> - குடித்து;
<strong>அருந்துபு</strong> - (அருந்தி) - உண்டு;</p>

<p>அதன் ஒளிமிக்க சிவந்த இரத்தம் மேலெழுந்து வழியும் போது, அதை உண்டு குடிக்கும்</p>

<blockquote>
  <p>புலவு புலி துறந்த கலவு கழி கடு முடை</p>
</blockquote>

<p><strong>புலவு புலி</strong> - புலால் நாற்றமுடைய புலி;
<strong>துறந்த</strong> - விட்டுப்போன;
<strong>கலவு கழி</strong> - தசைகள் நீக்கப்பட்ட;
<strong>கடு முடை</strong> - மிகுந்த நாற்றமுடைய;</p>

<p>புலால் நாற்றமுடைய புலி விட்டுப்போன தசைகள் இல்லாத மிகுந்த நாற்றமுடைய (அழுகிய உடல் என கொள்ளலாம்)</p>

<blockquote>
  <p>கொள்ளை மாந்தரின் ஆனாது கவரும்</p>
</blockquote>

<p><strong>கொள்ளை மாந்தரின்</strong> - கள்வரைப் போல;
<strong>ஆனாது</strong> - இடைவிடாமல்;
<strong>கவரும்</strong> - கவர்ந்து உண்ணும்;</p>

<p>கள்வரைப் போல இடைவிடாமல் கவர்ந்து உண்ணும்</p>

<blockquote>
  <p>புல் இலை மரா அத்த அகல் சேண் அத்தம்</p>
</blockquote>

<p><strong>புல் இலை</strong> - சிறிய இலைகளையுடைய;
<strong>மரா அத்த</strong> - மரா மரங்கள் நிறைந்த;
<strong>அகல் சேண்</strong> - (அகன்ற + தொலைவு) - அகன்ற தொலைவான;
<strong>அத்தம்</strong> - வழி (பாலை நில வழி என கொள்க);</p>

<p>சிறிய இலைகளையுடைய மரா மரங்கள் நிறைந்த அகன்ற தொலைவான பாலைநில வழியில்</p>

<blockquote>
  <p>கலந்தரல் உள்ளமொடு கழியக் காட்டிப்</p>
</blockquote>

<p><strong>கலந்தரல் உள்ளமொடு</strong> - கலக்கம் தரும் உள்ளத்தோடு;
<strong>கழிய</strong> - கடந்து செல்லும்படி;
<strong>காட்டி</strong> - வழிகாட்டி;</p>

<p>கலக்கம் தரும் உள்ளத்தோடு கடந்து செல்லும்படி வழிகாட்டி</p>

<blockquote>
  <p>பின் நின்று துரக்கு நெஞ்ச நின் வா</p>
</blockquote>

<p><strong>பின் நின்று</strong> - பின்னால் நின்று;
<strong>துரக்கும்</strong> - செலுத்துகின்ற;
<strong>நெஞ்ச</strong> - நெஞ்சமே;
<strong>நின்</strong> - உன்னுடைய;
<strong>வா</strong> - வாழ்வாயாக (வாழ்த்துப் பொருள் தரும் அசைநிலை);</p>

<p>பின்னால் நின்று செலுத்துகின்ற நெஞ்சமே, உன்னுடைய</p>

<blockquote>
  <p>வாய் போல் பொய் மொழி எவ்வம் என் களைமா</p>
</blockquote>

<p><strong>வாய் போல் பொய் மொழி</strong> - வாய்மை போன்ற பொய்மையான மொழிகள்;
<strong>எவ்வம்</strong> - துன்பத்தை;
<strong>என்</strong> - என்னுடைய;
<strong>களைமா</strong> - நீக்குமா;</p>

<p>வாய்மை போன்ற பொய்மையான மொழிகள், என்னுடைய துன்பத்தை நீக்குமா?</p>

<blockquote>
  <p>கவிர் இதழ் அன்ன காண்பின் செவ்வா</p>
</blockquote>

<p><strong>கவிர் இதழ் அன்ன</strong> - முள்முருங்கைப்பூவின் இதழைப் போன்ற;
<strong>காண்பின்</strong> - தோற்றத்தையுடைய;
<strong>செவ் வாய்</strong> - சிவந்த வாய்;</p>

<p>முள்முருங்கைப்பூவின் இதழைப் போன்ற தோற்றத்தையுடைய சிவந்த வாயின்</p>

<blockquote>
  <p>அம் தீம் கிளவி ஆய் இழை மடந்தை</p>
</blockquote>

<p><strong>அம் தீம் கிளவி</strong> - (அழகிய + இனிய + சொல்) - அழகிய இனிய சொற்களும்;
<strong>ஆய் இழை</strong> - ஆராய்ந்து செய்யப்பட்ட அணிகலன்களை அணிந்த;
<strong>மடந்தை</strong> - பெண்;</p>

<p>அழகிய இனிய சொற்களும், ஆராய்ந்து செய்யப்பட்ட அணிகலன்களை அணிந்த பெண்ணின்</p>

<blockquote>
  <p>கொடும் குழைக்கு அமர்த்த நோக்க</p>
</blockquote>

<p><strong>கொடும் குழைக்கு</strong> - வளைந்த காதணிக்கு;
<strong>அமர்த்த</strong> - ஒத்த ;
<strong>நோக்கு</strong> - பார்வை;</p>

<p>வளைந்த காதணிகளுடன் ஒத்து நிற்கும் பார்வை</p>

<blockquote>
  <p>நெடும் சேண் ஆர் இடை விலங்கு ஞான்றே.</p>
</blockquote>

<p><strong>நெடும் சேண்</strong> - (நெடிய + தொலைவு) - நீண்ட தொலைவையுடைய;
<strong>ஆர் இடை</strong> - அருமையான வழியில்;
<strong>விலங்கும் ஞான்றே</strong> - குறுக்கிடும் பொழுதில்;</p>

<p>அந்த நீண்ட தொலைவையுடைய அருமையான வழியில் குறுக்கிடும் பொழுதில்?</p>

<h2 id="படி-3-பாடலின்-பொருள்-மட்டும்---எளிமையாக">படி 3: பாடலின் பொருள் மட்டும் - எளிமையாக</h2>

<p>பெரிய உப்பளங்களில் வாழும் முதலையின் மேல் தோலை போன்ற கருத்த அடிமரத்தையுடைய ஓமை மரத்தை கண்டால், பெரிய கிளையில் பாதுகாப்பான, அகன்ற இடத்தில் குஞ்சு பொரித்து சோர்வடைந்திருந்த, வளைந்த அலகினையுடைய பெண் பறவைக்கு தகுந்த உணவு கொடுப்பதற்காக மாலை நேரத்தில் வேட்டைக்கு புறப்பட்ட சிவந்த காதுகளையுடைய ஆண் கழுகானது - வானத்தைத் தொடும் சிகரத்தையுடைய பெரிய மலையின் பக்கத்தில், அசைந்த நடையையுடைய மரைமானை வெற்றிகொண்டு கொன்று, அதன் ஒளிமிக்க சிவந்த இரத்தம் மேலெழுந்து வழியும் போது, அதை உண்டு குடிக்கும் புலால் நாற்றமுடைய புலி, விட்டுப்போன தசைகள் இல்லாத மிகுந்த நாற்றமுடைய அழுகிய உடலை, கள்வரைப் போல இடைவிடாமல் கவர்ந்து உண்ணும்.</p>

<p>சிறிய இலைகளையுடைய மரா மரங்கள் நிறைந்த அகன்ற தொலைவான பாலைநில வழியில், கலக்கம் தரும் உள்ளத்தோடு கடந்து செல்லும்படி வழிகாட்டி பின்னால் நின்று செலுத்துகின்ற நெஞ்சமே, உன்னுடைய வாய்மை போன்ற பொய்மையான மொழிகள், என்னுடைய துன்பத்தை நீக்குமா?</p>

<p>முள்முருங்கைப்பூவின் இதழைப் போன்ற தோற்றத்தையுடைய சிவந்த வாயின் அழகிய இனிய சொற்களும், ஆராய்ந்து செய்யப்பட்ட அணிகலன்களை அணிந்த பெண்ணின் வளைந்த காதணிகளுடன் ஒத்து நிற்கும் பார்வை, அந்த நீண்ட தொலைவையுடைய அருமையான வழியில் குறுக்கிடும் பொழுதில்?</p>

<h2 id="படி-4-பாடலை-பற்றிய-என்-கருத்துக்கள்">படி 4: பாடலை பற்றிய என் கருத்துக்கள்</h2>

<p>தலைவனின் நெஞ்சம், தலைவிக்காக பொருள் சேர்க்க தொலைதூரம் போக சொல்கிறது. அப்படி அவன் போகும் போது, தலைவியின் அழகான சிவந்த வாயிலிருந்து வரும் சொற்களும், அவளுடைய காதணிக்கு இணையாக அசைந்தாடும் அவளுடைய பார்வையும் குறுக்கிடுகிறது (தலைவியை பற்றிய நினைவுகள்). அந்த நேரத்தில் பொருள் சேர்ப்பதற்காக தலைவன் நெஞ்சம் சொன்ன காரணங்கள் எல்லாம் தலைவனின் துன்பத்தை (தலைவியின் நினைவுகள் தரும் துன்பத்தை) நீக்குமா?</p>

<p>அவனை அவனே கேட்டுக்கொள்ளும் கேள்வி. இது மட்டும் தான் இந்த பாடலின் கருத்து. இது பாடலின் கடைசி பகுதியில் (11-ம் வரியில் இருந்து 18-ம் வரி வரை) சொல்லப்படுகிறது. பாடலின் முதல் பகுதி (முதல் 10 வரிகள்), பாலை நிலத்தின் விலங்குகள், பறவைகள், அவற்றின் வேட்டை முறைகள் முதலியவற்றை சொல்லுகிறது. பாலை நிலத்தை பற்றிய அருமையான குறிப்புகள். ஆனால் முதல் பகுதி பாடலுடன் ஒட்டவில்லை. இடைச்செருகல் போல தனியாக தெரிகிறது.</p>
]]></description>
				
					<author><![CDATA[ (பிரேம்குமார் மாசிலாமணி)]]></author>
				
				<category><![CDATA[]]></category>
				<pubDate>Sat, 27 Sep 2025 00:00:00 +0530</pubDate>
				<guid isPermaLink="true">https://www.premkumarmasilamani.com/tamil/a400/003-irungazhi-mudhalai/</guid>
			</item>
		
			<item>
				<title><![CDATA[002 - கோழிலை வாழை]]></title>
				<link><![CDATA[https://www.premkumarmasilamani.com/tamil/a400/002-kozhilai-vazhai/]]></link>
				<description><![CDATA[<table>
  <tbody>
    <tr>
      <td><strong>நூல்</strong></td>
      <td>அகநானூறு</td>
    </tr>
    <tr>
      <td><strong>பாடல்</strong></td>
      <td>002 - கோழிலை வாழை</td>
    </tr>
    <tr>
      <td><strong>பாடியவர்</strong></td>
      <td>கபிலர்</td>
    </tr>
    <tr>
      <td><strong>திணை</strong></td>
      <td>குறிஞ்சி</td>
    </tr>
    <tr>
      <td><strong>துறை</strong></td>
      <td>காமத்தில் திளைத்து குறிக்கோளின்றி திரியும் தலைவனை நோக்கி தலைவி பாடியது</td>
    </tr>
  </tbody>
</table>

<p>கோழிலை வாழைக் கோண்மிகு பெருங்குலை <br />
யூழுறு தீங்கனி யுண்ணுநர்த் தடுத்த <br />
சாரற் பலவின் சுளையொ டூழ்படு <br />
பாறை நெடுஞ்சுனை விளைந்த தேற <br />
லறியா துண்ட கடுவ னயலது (5)</p>

<p>கறிவளர் சாந்த மேறல்செல் லாது <br />
நறுவீ யடுக்கத்து மகிழ்ந்துகண் படுக்குங் <br />
குறியா வின்ப மெளிதி னின்மலைப் <br />
பல்வேறு விலங்கு மெய்து நாட <br />
குறித்த வின்ப நினக்கெவ னரிய (10)</p>

<p>வெறுத்த வேஎர் வேய்புரை பணைத்தோ <br />
ணிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்மாட் <br />
டிவளு மினைய ளாயிற் றந்தை <br />
யருங்கடிக் காவலர் சோர்பத னொற்றிக் <br />
கங்குல் வருதலு முரிமை பைம்புதல் (15)</p>

<p>வேங்கையு மொள்ளிணர் விரிந்தன <br />
நெடுவெண் டிங்களு மூர்கொண் டன்றே. (17)</p>

<h2 id="படி-1-சொற்களை-பிரித்து-எழுதுவோம்">படி 1: சொற்களை பிரித்து எழுதுவோம்</h2>

<p>கோழ் இலை வாழை கோண் மிகு பெரும் குலை <br />
ஊழ் உறு தீம் கனி உண்ணுநர் தடுத்த <br />
சாரல் பலவின் சுளையொடு ஊழ்படு <br />
பாறை நெடும் சுனை விளைந்த தேறல் <br />
அறியாது உண்ட கடுவன் அயல் அது (5)</p>

<p>கறி வளர் சாந்தம் ஏறல் செல்லாது <br />
நறு வீ அடுக்கத்து மகிழ்ந்து கண் படுக்கும் <br />
குறியா இன்பம் எளிது இன் நின் மலை <br />
பல்வேறு விலங்கும் எய்தும் நாட <br />
குறித்த இன்பம் நினக்கு எவன் அரிய (10)</p>

<p>வெறுத்த ஏஎர் வேய் புரை பணை தோள் <br />
நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின் மாட்டு <br />
இவளும் இனையள் ஆயின் தந்தை <br />
அருங்கடி காவலர் சோர் பதன் ஒற்றி <br />
கங்குல் வருதலும் உரியை பைம் புதல் (15)</p>

<p>வேங்கையும் ஒள் இணர் விரிந்தன <br />
நெடு வெண் திங்களும் ஊர் கொண்டு அன்றே. (17)</p>

<h2 id="படி-2-சொற்களின்-அர்த்தத்தை-புரிந்து-கொள்வோம்">படி 2: சொற்களின் அர்த்தத்தை புரிந்து கொள்வோம்</h2>

<blockquote>
  <p>கோழ் இலை வாழை கோண் மிகு பெரும் குலை ஊழ் உறு தீம் கனி</p>
</blockquote>

<p><strong>கோழ்</strong> - வழுவழுப்பான;
<strong>கோண்</strong> - கோணல், வளைந்த நிலை;
<strong>குலை</strong> - காய்களின் தொகுப்பு;
<strong>ஊழ்</strong> - முதிர்ந்த;
<strong>உறு</strong> - மிகுதி;
<strong>தீம்</strong> - இனிய;</p>

<p>வழுவழுப்பான இலைகளையுடைய வாழைமரத்தின் வளைந்த பெரிய வாழைத்தாரில் உள்ள கனிந்த, மிக இனிமையான வாழைப்பழங்களும்</p>

<blockquote>
  <p>உண்ணுநர் தடுத்த சாரல் பலவின் சுளையொடு</p>
</blockquote>

<p><strong>உண்ணுநர்</strong> - உண்பவர்;
<strong>சாரல்</strong> - மலையின் பக்கம்;
<strong>பலவின்</strong> - பலாவின், பலாப்பழத்தின்;
<strong>சுளையொடு</strong> - பலாப்பழத்தின் சுளைகளோடு;</p>

<p>உண்பவர்களை மேலும் உண்ண முடியாதபடி திகட்டச்செய்யும், மலைச்சாரலில் உள்ள பலாப்பழத்தின் சுளைளும்</p>

<blockquote>
  <p>ஊழ்படு பாறை நெடும் சுனை விளைந்த தேறல்</p>
</blockquote>

<p><strong>ஊழ்படு</strong> - பழமை வாழ்ந்த;
<strong>சுனை</strong> - மலை ஊற்று;
<strong>விளைந்த</strong> - உண்டாகிய;
<strong>தேறல்</strong> - மது;</p>

<p>பழம்பெரும் பாறையின் இடையில் உள்ள நீர்த்தேக்கத்தில் விழுந்து, ஊறி, அந்த நீரினை மதுவாக மாற்றி இருக்கும்</p>

<blockquote>
  <p>அறியாது உண்ட கடுவன்</p>
</blockquote>

<p><strong>கடுவன்</strong> - ஆண் குரங்கு;</p>

<p>அந்த நீரினை மதுவென அறியாது உண்ட ஒரு ஆண் குரங்கானது</p>

<blockquote>
  <p>அயல் அது கறி வளர் சாந்தம் ஏறல் செல்லாது</p>
</blockquote>

<p><strong>அயல்</strong> - அருகில் உள்ள இடம்;
<strong>கறி</strong> - மிளகு, மிளகுக்கொடி என பொருள் கொள்க;
<strong>சாந்தம்</strong> - சந்தனம், சந்தன மரம் என பொருள் கொள்க;</p>

<p>அருகில் உள்ள மிளகுக்கொடிகள் படர்ந்த சந்தன மரத்தில் ஏறாமல்</p>

<blockquote>
  <p>நறு வீ அடுக்கத்து மகிழ்ந்து கண் படுக்கும்</p>
</blockquote>

<p><strong>நறு</strong> - நறுமணம்;
<strong>வீ</strong> - மலர்;
<strong>அடுக்கு</strong> - ஒழுங்கு, வரிசை;
<strong>அத்து</strong> - எல்லை;</p>

<p>உதிர்ந்த நறுமணமிக்க மலர்களால் ஆன மலர்ப்படுக்கையில் படுத்து மகிழ்ந்து கண்ணுறங்கும்</p>

<blockquote>
  <p>குறியா இன்பம் எளிது இன் நின் மலை பல்வேறு விலங்கும் எய்தும் நாட</p>
</blockquote>

<p><strong>குறியா</strong> - குறிப்பிடப்படாத, எதிர்பாராத என பொருள் கொள்க;
<strong>எளிது</strong> - சுலபமானது;
<strong>நின்</strong> - உனது;
<strong>எய்தும்</strong> - அடையும்;
<strong>நாட</strong> - நாடன், அந்த தேசத்தை சேர்ந்தவன்;</p>

<p>இத்தகைய எதிர்பாராத இன்பங்களை பல்வேறு விலங்குகளும் அடைந்து மகிழும் மலை நாட்டைச் சேர்ந்தவனே</p>

<blockquote>
  <p>குறித்த இன்பம் நினக்கு எவன் அரிய</p>
</blockquote>

<p><strong>குறித்த</strong> - குறிப்பிட்ட;
<strong>நினக்கு</strong> - உனக்கு;
<strong>எவன்</strong> - எப்படி;
<strong>அரிய</strong> - அபூர்வமான;</p>

<p>நீ எதிர்நோக்கும் இன்பம் அடைவது உனக்கு எப்படி அரியதாகும்?</p>

<blockquote>
  <p>வெறுத்த ஏஎர் வேய் புரை பணை தோள்</p>
</blockquote>

<p><strong>வெறுத்த</strong> - மிகுதி;
<strong>ஏஎர்</strong> - அழகு;
<strong>வேய்</strong> - மூங்கில்;
<strong>புரை</strong> - பெருமை;
<strong>பணை</strong> - பருமை, பருத்த;</p>

<p>மிகுந்த அழகுடைய மூங்கிலைப் போன்ற பெருத்த தோள்களையுடைய பெருமை உடையவளாக</p>

<blockquote>
  <p>நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின் மாட்டு</p>
</blockquote>

<p><strong>நிறுப்ப</strong> - நிறுவுதல்;
<strong>நில்லா</strong> - நிலைத்திராமை;
<strong>நிறுப்ப நில்லா நெஞ்சமொடு</strong> - நிலையில்லாத, அலைபாயும் நெஞ்சத்தோடு;
<strong>நின் மாட்டு</strong> - உன்னிடம்;</p>

<p>நிலையில்லாமல் உன்னை நோக்கி அலைபாயும் நெஞ்சத்தை உடையவளாக</p>

<blockquote>
  <p>இவளும் இனையள் ஆயின்</p>
</blockquote>

<p><strong>இனையள்</strong> - இத்தகையவள்;
<strong>ஆயின்</strong> - ஆனால்;</p>

<p>இவள் இருப்பதால்</p>

<blockquote>
  <p>தந்தை அருங்கடி காவலர்</p>
</blockquote>

<p><strong>அருங்கடி</strong> - அச்சம் தரக்கூடிய;</p>

<p>இவள் தந்தையிடம் இருக்கும் அச்சம் தரக்கூடிய காவலர்கள்</p>

<blockquote>
  <p>சோர் பதன் ஒற்றி</p>
</blockquote>

<p><strong>சோர்</strong> - சோர்வு;
<strong>பதன்</strong> - பக்குவம்;
<strong>ஒற்றி</strong> - வேவு பார்த்தல்;</p>

<p>சோர்ந்திருக்கும் நேரத்தை பக்குவமாய் அறிந்து</p>

<blockquote>
  <p>கங்குல் வருதலும் உரியை</p>
</blockquote>

<p><strong>கங்குல்</strong> - இரவு;
<strong>உரியை</strong> - உரிமை உடையவன்;</p>

<p>இரவு நேரத்தில் வந்து இவளை சந்திக்கும் உரிமை உடையவன் ஆகிறாய்.</p>

<blockquote>
  <p>பைம் புதல் வேங்கையும் ஒள் இணர் விரிந்தன</p>
</blockquote>

<p><strong>பைம்</strong> - பசுமை;
<strong>புதல்</strong> - புதர் செடிகள்;
<strong>வேங்கை</strong> - வேங்கை மரம்;
<strong>ஒள்</strong> - பிரகாசமான;
<strong>இணர்</strong> - பூங்கொத்து;
<strong>விரி</strong> - மலர்தல்;</p>

<p>பசுமையான புதர்கள் சூழ்ந்திருக்கும் வேங்கை மரத்தின் பிரகாசமான மலர்கள் கொத்துக் கொத்தாய் மலர்ந்துள்ளன.</p>

<blockquote>
  <p>நெடு வெண் திங்களும் ஊர் கொண்டு அன்றே.</p>
</blockquote>

<p><strong>திங்கள்</strong> - நிலா;
<strong>ஊர்</strong> - சந்திரன், சூரியனை சுற்றி தெரியும் ஒரு வட்டம்.</p>

<p>மழை வருவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன் காற்றில் ஈரப்பதம் மிகுந்து இருக்கும். அப்போது காற்றில் உள்ள சிறு துளிகள், சந்திரனின் ஒளியை சிதறடிப்பதனால் தோன்றும் வானவில் போன்ற ஒரு வட்டம்;</p>

<p>பெரிய வெண்மையான சந்திரனை சுற்றி ஓர் ஒளிவட்டம் தோன்றியுள்ளது.</p>

<h2 id="படி-3-பாடலின்-பொருள்-மட்டும்---எளிமையாக">படி 3: பாடலின் பொருள் மட்டும் - எளிமையாக</h2>

<p>வழுவழுப்பான இலைகளையுடைய வாழைமரத்தின் வளைந்த பெரிய வாழைத்தாரில் உள்ள கனிந்த மிக இனிமையான வாழைப்பழங்களும், உண்பவர்களை மேலும் உண்ண முடியாதபடி திகட்டச்செய்யும் மலைச்சாரலில் உள்ள பலாப்பழத்தின் சுளைளும், பழம்பெரும் பாறையின் இடையில் உள்ள நீர்த்தேக்கத்தில் விழுந்து ஊறி, அந்த நீரினை மதுவாக மாற்றி இருக்கும்.</p>

<p>அந்த நீரினை மதுவென அறியாது உண்ட ஒரு ஆண் குரங்கானது, அருகில் உள்ள மிளகுக்கொடிகள் படர்ந்த சந்தன மரத்தில் ஏறாமல், உதிர்ந்த நறுமணமிக்க மலர்களால் ஆன மலர்ப்படுக்கையில் படுத்து மகிழ்ந்து கண்ணுறங்கும்.</p>

<p>இத்தகைய எதிர்பாராத இன்பங்களை பல்வேறு விலங்குகளும் அடைந்து மகிழும் மலை நாட்டைச் சேர்ந்தவனே, “நீ எதிர்நோக்கும் இன்பம் அடைவது உனக்கு எப்படி அரியதாகும்?”</p>

<p>மிகுந்த அழகுடைய மூங்கிலைப் போன்ற பெருத்த தோள்களையுடைய, பெருமை உடையவளாக, நிலையில்லாமல் உன்னை நோக்கி அலைபாயும் நெஞ்சத்தை உடையவளாக, இவள் இருப்பதால்</p>

<p>இவள் தந்தையிடம் இருக்கும் அச்சம் தரக்கூடிய காவலர்கள், சோர்ந்திருக்கும் நேரத்தை பக்குவமாய் அறிந்து இரவு நேரத்தில் வந்து இவளை சந்திக்கும் உரிமை உடையவன் ஆகிறாய்.</p>

<p>பசுமையான புதர்கள் சூழ்ந்திருக்கும் வேங்கை மரத்தின் பிரகாசமான மலர்கள் கொத்துக் கொத்தாய் மலர்ந்துள்ளன. பெரிய வெண்மையான சந்திரனை சுற்றி ஓர் ஒளிவட்டம் தோன்றியுள்ளது.</p>

<h2 id="படி-4-பாடலை-பற்றிய-என்-கருத்துக்கள்">படி 4: பாடலை பற்றிய என் கருத்துக்கள்</h2>

<p>“இரகசியமாய் தலைவியுடன் கூடி குலாவி காதல் செய்தது போதும். காலம் கடந்து கொண்டிருக்கிறது. அடுத்தகட்ட வேலையை (மணமுடித்தல்) பார்” - இது தான் தலைவி தன் தோழி மூலம் தலைவனுக்கு சொல்ல விழைந்த செய்தி.</p>

<p>கபிலர் இயற்றிய இந்த பாடலில், தலைவி சொல்ல வந்த கருத்தோடு, குறிஞ்சி நிலத்தில் வளரும் மரங்கள், அதன் செழுமை, அங்கு வாழும் விலங்குகளின் நிலை, அக்கால இளம்பெண்களின் உடலமைப்பு, காதல் செய்யும் நேரம், பெண்ணை பெற்ற தந்தைகளின் பொதுவான போக்கு, அவர்களிடம் வேலை செய்யும் காவலர்கள், அறுவடையை ஒற்றி செய்யப்படும் திருமணங்கள், மழைக்கு முன் தெரியும் இயற்கை குறியீடுகள், குறி சொல்லும் பாங்கு போன்ற பல விடயங்களை தெரிந்துகொள்ள முடிகிறது. அவை பாடலின் போக்குடன் மிக இயல்பாக புனையப்பட்டு இருக்கிறது.</p>

<p>இப்பாடலின் மற்றுமொரு சிறப்பு, இதன் உள்ளுறை உவமம். உள்ளுறை உவமம் என்பது பாடலின் வெளிப்படையான பொருளுடன், மற்றுமொரு பொருள் உள்ளுக்குள் மறைந்திருக்கும். மேலோட்டமாக படித்தால் உணர முடியாது. ஆழ்ந்து படிக்கும்போது புரியும்.</p>

<p>மதுவென அறியாது குடித்த ஆண் குரங்கானது, மரத்தில் ஏறாமல் மலர் படுக்கையில் படுத்து உறங்குவது போல, காதல் மயக்கத்தில் உள்ள தலைவன், மணமுடிக்க தேவையான வேலைகளை பார்க்காமல், தலைவியுடன் கூடுவதில் மட்டும் ஆர்வம் காட்டுகிறான். தலைவனை ஆண் குரங்கோடு ஒப்பிட்டு, அதனை போல் இராதே என சொல்வது மிக பொருத்தமான உவமை.</p>

<p>உணர்ந்த பின், ஒரு சிறு புன்முறுவலை வரவழைக்கும் பாடல்.</p>
]]></description>
				
					<author><![CDATA[ (பிரேம்குமார் மாசிலாமணி)]]></author>
				
				<category><![CDATA[]]></category>
				<pubDate>Sun, 18 Aug 2019 00:00:00 +0530</pubDate>
				<guid isPermaLink="true">https://www.premkumarmasilamani.com/tamil/a400/002-kozhilai-vazhai/</guid>
			</item>
		
			<item>
				<title><![CDATA[001 - வண்டுபடத் ததைந்த]]></title>
				<link><![CDATA[https://www.premkumarmasilamani.com/tamil/a400/001-vandu-padatha-thaintha/]]></link>
				<description><![CDATA[<table>
  <tbody>
    <tr>
      <td><strong>நூல்</strong></td>
      <td>அகநானூறு</td>
    </tr>
    <tr>
      <td><strong>பாடல்</strong></td>
      <td>001 - வண்டுபடத் ததைந்த</td>
    </tr>
    <tr>
      <td><strong>பாடியவர்</strong></td>
      <td>மாமூலனார்</td>
    </tr>
    <tr>
      <td><strong>திணை</strong></td>
      <td>பாலை</td>
    </tr>
    <tr>
      <td><strong>துறை</strong></td>
      <td>பொருள் ஈட்டுவதற்காக, பாலை நிலம் தாண்டி சென்ற தலைவனை பற்றி தலைவி தோழியிடம் பாடியது</td>
    </tr>
  </tbody>
</table>

<p>வண்டுபடத் ததைந்த கண்ணி யொண்கழ <br />
லுருவக் குதிரை மழவ ரோட்டிய <br />
முருக னற்போர் நெடுவே ளாவி <br />
யறுகோட்டி யானைப் பொதினி யாங்கட் <br />
சிறுகா ரோடன் பயினொடு சேர்த்திய (5)</p>

<p>கற்போற் பிரியல மென்ற சொற்றா <br />
மறந்தனர் கொல்லோ தோழி சிறந்த <br />
வேய்மருள் பணைத்தோ ணெகிழச் சேய்நாட்டுப் <br />
பொலங்கல வெறுக்கை தருமார் நிலம்பக <br />
வழல்போல் வெங்கதிர் பைதறத் தெறுதலி (10)</p>

<p>னிழறேய்ந் துலறிய மரத்த வறைகாய் <br />
பறுநீர்ப் பைஞ்சுனை யாமறப் புலர்தலி <br />
னுகுநெற் பொரியும் வெம்மைய யாவரும் <br />
வழங்குந ரின்மையின் வௌவுநர் மடியச் <br />
சுரம்புல் லென்ற வாற்ற வலங்குசினை (15)</p>

<p>நாரின் முருங்கை நவிரல் வான்பூச் <br />
சூரலங் கடுவளி யெடுப்ப வாருற் <br />
றுடைதிரைப் பிதிர்விற் பொங்கிமுன் <br />
கடல்போற் றோன்றல காடிறந் தோரே. (19)</p>

<h2 id="படி-1-சொற்களை-பிரித்து-எழுதுவோம்">படி 1: சொற்களை பிரித்து எழுதுவோம்</h2>

<p>வண்டு படத்த தைந்த கண்ணி ஒண் கழல் <br />
உருவக் குதிரை மழவர் ஓட்டிய <br />
முருகன் நற்போர் நெடுவேள் ஆவி <br />
அறு கோட்டு யானை பொதினி ஆங்கண் <br />
சிறு கார் ஓடு அன் பயின் ஓடு சேர்த்து இய (5)</p>

<p>கல் போல் பிரியலம் என்ற சொல் தாம் <br />
மறந்தனர் கொல்லோ தோழி சிறந்த <br />
வேய் மருள் பணை தோள் நெகிழ சேய் நாட்டு <br />
பொலம் கலம் வெறுக்கை தருமார் நிலம் பக <br />
அழல் போல் வெங்கதிர் பைது அற தெறுதல் இன் (10)</p>

<p>நிழல் தேய்ந்து உலறிய மரத்த அறை காய்பு <br />
அறு நீர் பைஞ்சுனை ஆம் அற புலர்தல் இன் <br />
உகு நெல் பொரியும் வெம்மைய யாவரும் <br />
வழங்குநர் இன்மையின் வௌவுநர் மடிய <br />
சுரம் புல் என்ற ஆற்ற அலங்கு சினை (15)</p>

<p>நார் இல் முருங்கை நவிரல் வான் பூ <br />
சூரல் அம் கடு வளி எடுப்ப ஆர் உற்று <br />
உடை திரை பிதிர்வின் பொங்கி முன் <br />
கடல் போல் தோன்றல் அ காடு இறந்தோரே. (19)</p>

<h2 id="படி-2-சொற்களின்-அர்த்தத்தை-புரிந்து-கொள்வோம்">படி 2: சொற்களின் அர்த்தத்தை புரிந்து கொள்வோம்</h2>

<blockquote>
  <p>வண்டு படத்த தைந்த கண்ணி</p>
</blockquote>

<p><strong>வண்டு</strong> - மலர்களில் தேனெடுக்கும் பூச்சியினம்;
<strong>படத்தல்</strong> - ஒலி உண்டாதல். வண்டுகள் உண்டாக்கும் ஒலி;
<strong>தைந்த</strong> - செறிந்து மலர்ந்த;
<strong>கண்ணி</strong> - பூமாலை;</p>

<p>வண்டுகள் ரீங்காரமிட்டுக்கொண்டு மொய்க்கக்கூடிய மலர்ந்த பூக்களால் ஆன மாலைகளையும்</p>

<blockquote>
  <p>ஒண் கழல் உருவக் குதிரை மழவர்</p>
</blockquote>

<p><strong>ஒண்</strong> - சிறந்த;
<strong>கழல்</strong> - வீரர்கள் காலில் அணியும் வளையம், தண்டை;
<strong>உரு</strong> - அச்சம்;
<strong>உருவக் குதிரை</strong> - அச்சம் தரக்கூடிய குதிரை;
<strong>மழவர்</strong> - மழநாட்டில் வாழ்ந்த மழவர் குடிமக்கள்;</p>

<p>சிறந்த தண்டைகளையும் காலில் அணிந்துகொண்டு, பார்த்தாலே பயம் தரக்கூடிய வலிமையான குதிரைகளில் பயணம் செய்யும், மழநாட்டில் வாழ்ந்த மழவர் வீரர்களை</p>

<blockquote>
  <p>ஓட்டிய முருகன் நற்போர் நெடுவேள் ஆவி</p>
</blockquote>

<p><strong>ஓட்டிய</strong> - விரட்டிய;
<strong>முருகன்</strong> - குறிஞ்சி தினை கடவுள்;
<strong>நற்போர்</strong> - தருமநெறி தவறாத போர்;
<strong>நெடுவேள் ஆவி</strong> - சங்ககாலத்து மன்னன்;</p>

<p>போரில் தோற்கடித்து விரட்டிய, குறிஞ்சி கடவுளான முருகனை போல் தருமநெறி தவறாமல் போர் செய்யும் மன்னன் நெடுவேள் ஆவியின்</p>

<blockquote>
  <p>அறு கோட்டு யானை பொதினி ஆங்கண்</p>
</blockquote>

<p><strong>அறு</strong> - அறுத்தல்;
<strong>கோடு</strong> - யானையின் பல், தந்தம்;
<strong>பொதினி</strong> - இக்காலத்தில் பழனி என்று அழைக்கப்படும் ஊர்;
<strong>ஆங்கண்</strong> - அவ்விடத்து;</p>

<p>அறுத்து அலங்கரிக்கப்பட்ட தந்தங்களை உடைய யானைகள் மிகுந்திருக்கும் பொதினி (தற்போதைய பழனி) என்னும் ஊரில் உள்ள</p>

<blockquote>
  <p>சிறு கார் ஓடு அன் பயின் ஓடு சேர்த்து இய கல்</p>
</blockquote>

<p><strong>சிறு</strong> - சிறிய, சிறுவர்;
<strong>கார்</strong> - கடுங்கரி;
<strong>ஓடு</strong> - உடன் எனும் பொருளில் வரும்;
<strong>அன்</strong> - இடைச்சொல், ஒரே தன்மையுடைய பொருளின் கூட்டம் எனும் பொருளில் வரும்;
<strong>பயின்</strong> - பிசின், ஒட்டுந்தன்மை உள்ள பொருள்;
<strong>இய</strong> - இயை;</p>

<p>சங்ககாலத்தில் பொதினி மலை வைரங்களை பட்டை தீட்டும் தொழிலுக்கு பிரபலமாக இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த சொற்றொடர்  ஒரு நுட்பமான,
வைரங்களை பட்டைதீட்டும் கல் தயாரிப்பு முறையை விவரிக்கும் சொற்றொடர். கார் - கடுங்கரி, மலைகளில் கிடைக்கும் ஒரு வகையான கல். பயின் - பிசின்,
ஒட்டுந்தன்மை உள்ள பொருள். சேர்த்திய கல் - சேர்த்து + இய + கல், சேர்த்து இயைத்த கல். உருவாக்கியபின் இதிலிருந்து கல்லையும் பிசினையும் பிரிக்க முடியாது.</p>

<p>அதாவது மலைகளில் கிடைக்கும் ஒருவிதமான கற்பொடியுடன், இறுகும் தன்மையுள்ள ஒரு விதமான பிசினை சேர்த்து, சூளையில் செய்த கல்.
இதில் பொடித்த கல் என்று நேரிடையாக குறிப்பிடப்படவில்லை. பெரிய கற்களின் மேல் பிசினை தடவத்தான் முடியும். ஆனால் கற்பொடியுடன்
பிசினை கலக்க முடியும். சேர்த்து இயைத்த கல் என்று குறிப்பிடுவதால் அது பொடித்த கல் என உணர்ந்து கொள்ளலாம். அதே போல்,
சூளையில் வேகவைப்பதும் நேரிடையாக குறிப்பிடப்படவில்லை. அந்த காலத்தில் மனிதனால் செய்யப்பட்ட கடினமான பொருட்கள் அனைத்தும்
நெருப்பின் துணை கொண்டே செய்யப்பட்டுள்ளன. அந்த அறிவின்படி இதை உணர்ந்துகொள்ளலாம்.</p>

<p>மிக நுட்பமான ஒரு தயாரிப்பு முறையை ஒரே வரியில் மிக மிக அழாகாக விளக்கியுள்ளார் மாமூலனார்.</p>

<blockquote>
  <p>கல் போல் பிரியலம் என்ற சொல் தாம்
மறந்தனர் கொல்லோ தோழி</p>
</blockquote>

<p><strong>பிரியலம்</strong> - பிரி + அல் + அம். பிரி - விட்டு விலகு, <strong>அல்</strong> - எதிர்மறை நிலை, அம் - சாரியை. பிரியாமல் இருப்போம் என பொருள்படும்;
<strong>கொல்</strong> - இடைச்சொல், ஐயத்தை வெளிப்படுத்துவது. ஓகாரம் சேர்த்து “கொல்லோ” என்றும் எழுதலாம்;</p>

<p>அந்த “கல் போல் எப்போதும் உன்னை பிரியமாட்டேன்” என்று அவர் சொன்ன சொல்லை மறந்துவிட்டாரோ தோழி?.</p>

<p>தன்னை பிரிந்து சென்ற காதலரை பற்றி காதலி தன் தோழியிடம் புலம்புகிறாள்.</p>

<blockquote>
  <p>சிறந்த வேய் மருள் பணை தோள் நெகிழ</p>
</blockquote>

<p><strong>வேய்</strong> - மூங்கில்;
<strong>மருள்</strong> - மயக்கம்;
<strong>பணை</strong> - பருமை, பருத்த;
<strong>பணைத்தோள்</strong> - பெரிய தோள்;
<strong>நெகிழ</strong> - மெலிய;</p>

<p>பார்ப்பவர்கள் “இது மூங்கிலோ?” என மயக்கங்கொள்ளும், என்னுடைய பெரிய தோள்களும் மெலிந்து போகுமாறு</p>

<blockquote>
  <p>சேய் நாட்டு பொலம் கலம் வெறுக்கை தருமார்</p>
</blockquote>

<p><strong>சேய்</strong> - தொலைவு;
<strong>சேய்நாடு</strong> - தொலைவில் உள்ள நாடு;
<strong>பொலம்</strong> - பொன்;
<strong>கலம்</strong> - அணிகலன்;
<strong>வெறுக்கை</strong> - செல்வம்;
<strong>தருமார்</strong> - தரும்பொருட்டு;</p>

<p>தொலைவில் உள்ள நாட்டுக்கு சென்று, எனக்காக பொன்னும், நகைகளும், செல்வமும் ஈட்டி வருவதற்காக</p>

<blockquote>
  <p>நிலம் பக அழல் போல் வெங்கதிர் பைது அற தெறுதல் இன்</p>
</blockquote>

<p><strong>பக</strong> - பிளக்க;
<strong>அழல்</strong> - நெருப்பு;
<strong>வெங்கதிர்</strong> - வெம்மையான கதிர்களையுடைய சூரியன்;
<strong>பைது</strong> - பசுமை;
<strong>அற</strong> - இல்லாமல்;
<strong>தெறுதல்</strong> - சுடுதல், அழித்தல்;</p>

<p>நெருப்பை போல வெப்பம் தரக்கூடிய சூரியன், நிலம் வறண்டு பிளக்குமாறு, கொஞ்சம் கூட பசுமையை விட்டு வைக்காமல் சுட்டு எரித்ததால்</p>

<blockquote>
  <p>நிழல் தேய்ந்து உலறிய மரத்த</p>
</blockquote>

<p><strong>தேய்ந்து</strong> - சுருங்க;
<strong>உலறிய</strong> - காய்ந்த;</p>

<p>தன்னுடைய நிழல் கூட இல்லாமல் போகுமளவுக்கு காய்ந்து போன மரங்களும்</p>

<blockquote>
  <p>அறை காய்பு அறு நீர் பைஞ்சுனை ஆம் அற புலர்தல் இன்</p>
</blockquote>

<p><strong>அறை</strong> - பாறை;
<strong>காய்பு</strong> - காய்ந்த;
<strong>அறுநீர்</strong> - மாசற்ற நீர், சுத்தமான நீர்;
<strong>பை</strong> - பசுமை, இளமை;
<strong>சுனை</strong> - நீர்நிலை, மலையூற்று;
<strong>பைஞ்சுனை</strong> - பசுமையான நீரூற்று;
<strong>ஆம்</strong> - நீர், ஈரம்;
<strong>அற</strong> - முழுவதும்;
<strong>புலர்தல்</strong> - காய்ந்து உலர்தல்;</p>

<p>காய்ந்து போன பாறைகளும், சுத்தமான நீரினை உடைய பசுமையான நீரூற்றுக்களும் கூட, துளி கூட ஈரம் இல்லாத அளவுக்கு காய்ந்து உலர்ந்து இருக்க</p>

<blockquote>
  <p>உகு நெல் பொரியும் வெம்மை</p>
</blockquote>

<p><strong>உகு</strong> - சிந்துதல்;
<strong>வெம்மை</strong> - வெப்பம்;</p>

<p>தரையில் சிந்திய நெல் பொங்கி பொரியாக கூடிய அளவுக்கு வெப்பம் இருப்பதால்</p>

<blockquote>
  <p>யாவரும் வழங்குநர் இன்மையின் வௌவுநர் மடிய</p>
</blockquote>

<p><strong>யாவரும்</strong> - அனைவரும்;
<strong>வழங்குநர்</strong> - கொடுப்பவர்;
<strong>இன்மையின்</strong> - இல்லாமை;
<strong>வௌவுநர்</strong> - வழிப்பறி செய்பவர்;
<strong>மடிய</strong> - இறக்க;</p>

<p>வழிப்போக்கர்கள் யாரும் இல்லாததால், வருமானம் இன்றி வழிப்பறி கொள்ளையர் செத்து மடியக்கூடிய</p>

<blockquote>
  <p>சுரம் புல் என்ற ஆற்ற</p>
</blockquote>

<p><strong>சுரம்</strong> - பாலைநிலம்;
<strong>சுரம்புல்</strong> - பாலைநிலத்தில் வளரும் புல்;
<strong>ஆற்ற</strong> - மிகுந்த;</p>

<p>சுரம்புல் என்கிற ஒருவகை புற்கள் நிறைந்த பாலை நிலத்தில்</p>

<blockquote>
  <p>அலங்கு சினை நார் இல் முருங்கை நவிரல் வான் பூ</p>
</blockquote>

<p><strong>அலங்கு</strong> - அசைதல்;
<strong>சினை</strong> - மரக்கிளை;
<strong>நார்</strong> - மட்டையின் நார்;
<strong>நவிரல்</strong> - மரவகை;
<strong>வான்</strong> - அழகு;</p>

<p>நாரில்லாத முருங்கை மரத்தின் அசைகின்ற கிளைகளில் உள்ள வெண்ணிற பூக்களை</p>

<blockquote>
  <p>சூரல் அம் கடு வளி எடுப்ப ஆர் உற்று</p>
</blockquote>

<p><strong>சூரல்</strong> - சுழற்றி அடித்தல்;
<strong>கடுவளி</strong> - பெருங்காற்று;
<strong>எடுப்ப</strong> - எடுத்தல், எழுப்புதல்;
<strong>ஆர்</strong> - ஆர் என்னும் உரிச்சொல் மிகுதியை உணர்த்தும்;
<strong>உற்று</strong> - கூர்ந்து;</p>

<p>கடுமையான காற்று எடுத்து சுழற்றி அடிப்பதை பார்க்கும் போது</p>

<blockquote>
  <p>உடை திரை பிதிர்வின் பொங்கி முன்</p>
</blockquote>

<p><strong>உடை</strong> - நொறுங்கு;
<strong>திரை</strong> - அலை;
<strong>பிதிர்வு</strong> - மகரந்தம், பூந்தாது;
<strong>பொங்க</strong> - கொதிக்க;</p>

<p>அந்த பூக்களில் இருந்து சிதறிய மகரந்தங்களும் வெப்பத்தில் கொதித்து, காற்றில் பறப்பது, கரையில் மோதி உடையும் அலை போல இருப்பதால்</p>

<blockquote>
  <p>கடல் போல் தோன்றல் அ காடு இறந்தோரே</p>
</blockquote>

<p><strong>தோன்றல்</strong> - தோற்றம் தருதல்;
<strong>அ</strong> - சுட்டெழுத்து, அந்த என பொருள் கொள்ளலாம்;
<strong>காடு</strong> - வனம்;
<strong>இறத்தல்</strong> - நீங்குதல்;</p>

<p>அந்த கொடுமையான பாலைவனக்காடு கடல் போல் தோற்றமளிக்கிறது. அவர் அந்த காட்டையும் கடந்து சென்றாரே, தோழி என தன் காதலர் தன்னை
பிரிந்து செல்லும் இடத்தை பற்றி சொல்கிறாள் காதலி.</p>

<h2 id="படி-3-பாடலின்-பொருள்-மட்டும்---எளிமையாக">படி 3: பாடலின் பொருள் மட்டும் - எளிமையாக</h2>

<p>வண்டுகள் ரீங்காரமிட்டுக்கொண்டு மொய்க்கக்கூடிய மலர்ந்த பூக்களால் ஆன மாலைகளையும், சிறந்த தண்டைகளையும் காலில் அணிந்துகொண்டு, பார்த்தாலே பயம் தரக்கூடிய வலிமையான குதிரைகளில் பயணம் செய்யும், மழநாட்டில் வாழ்ந்த மழவர் வீரர்களை, போரில் தோற்கடித்து விரட்டிய, குறிஞ்சி கடவுளான முருகனை போல் தருமநெறி தவறாமல் போர் செய்யும் மன்னன் நெடுவேள் ஆவியின், அறுத்து அலங்கரிக்கப்பட்ட தந்தங்களை உடைய யானைகள் மிகுந்திருக்கும் பொதினி (தற்போதைய பழனி) என்னும் ஊரில் உள்ள மலைகளில் கிடைக்கும் ஒருவிதமான கற்பொடியுடன், இறுகும் தன்மையுள்ள ஒரு விதமான பிசினை சேர்த்து, சூளையில் செய்த  அந்த “கல் போல் எப்போதும் உன்னை பிரியமாட்டேன்” என்று அவர் சொன்ன சொல்லை மறந்துவிட்டாரோ தோழி?.</p>

<p>பார்ப்பவர்கள் “இது மூங்கிலோ?” என மயக்கங்கொள்ளும், என்னுடைய பெரிய தோள்களும் மெலிந்து போகுமாறு, தொலைவில் உள்ள நாட்டுக்கு சென்று, எனக்காக பொன்னும், நகைகளும், செல்வமும் ஈட்டி வருவதற்காக, நெருப்பை போல வெப்பம் தரக்கூடிய சூரியன், நிலம் வறண்டு பிளக்குமாறு, கொஞ்சம் கூட பசுமையை விட்டு வைக்காமல் சுட்டு எரித்ததால் தன்னுடைய நிழல் கூட இல்லாமல் போகுமளவுக்கு காய்ந்து போன மரங்களும், காய்ந்து போன பாறைகளும், சுத்தமான நீரினை உடைய பசுமையான நீரூற்றுக்களும் கூட, துளி கூட ஈரம் இல்லாத அளவுக்கு காய்ந்து உலர்ந்து இருக்க, தரையில் சிந்திய நெல் பொங்கி பொரியாக கூடிய அளவுக்கு வெப்பம் இருப்பதால், வழிப்போக்கர்கள் யாரும் இல்லாததால், வருமானம் இன்றி வழிப்பறி கொள்ளையர் செத்து மடியக்கூடிய, சுரம்புல் என்கிற ஒருவகை புற்கள் நிறைந்த பாலை நிலத்தில், நாரில்லாத முருங்கை மரத்தின் அசைகின்ற கிளைகளில் உள்ள வெண்ணிற பூக்களை, கடுமையான காற்று எடுத்து சுழற்றி அடிப்பதை பார்க்கும் போது, அந்த பூக்களில் இருந்து சிதறிய மகரந்தங்களும் வெப்பத்தில் கொதித்து, காற்றில் பறப்பது, கரையில் மோதி உடையும் அலை போல இருப்பதால், அந்த கொடுமையான பாலைவனக்காடு கடல் போல் தோற்றமளிக்கிறது.</p>

<p>அவர் அந்த காட்டையும் கடந்து சென்றாரே தோழி, என தன் காதலர் தன்னை பிரிந்து செல்லும் இடத்தை பற்றி சொல்கிறாள் காதலி.</p>

<h2 id="படி-4-பாடலை-பற்றிய-என்-கருத்துக்கள்">படி 4: பாடலை பற்றிய என் கருத்துக்கள்</h2>

<p>இது பாலை தினையை பற்றிய பாடல். ஆனால் பாடலின் முதல் பகுதி குறிஞ்சித்திணையை விவரிக்கிறது. பாடலின் பெரும்பகுதி பாலைத்திணையை பற்றி
இருப்பதால் இது பாலைத்திணையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது என நினைக்கிறேன்.</p>

<p>மாமூலனாரிடம் எனக்கு மிகவும் பிடித்தது - தான் சொல்ல வந்த கருத்தை மட்டும் சொல்லாமல், அதற்குத் தொடர்புடைய மற்ற நிகழ்வுகளையும் அழகாக
விவரிப்பதன் மூலம் அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கையை நம் கண்முன்னே நிறுத்துகிறார்.</p>

<p>உதாரணத்திற்கு, காதலன் காதலியிடம் “உன்னை பிரிய மாட்டேன்” என்று சொல்கிறான். இதுதான் கருத்து. இதை நேரிடையாக சொல்லலாம்.
ஆனால் மாமூலனாரின் பாணியை கவனியுங்கள்.</p>

<p>நான் உன்னை பிரிய மாட்டேன்.</p>

<p><strong>எப்படி பிரிய மாட்டேன்?</strong></p>

<p>சாணைக்கல்லில் இருந்து எப்படி கல்லையும் பிசினையும் பிரிக்க முடியாதோ அதைப் போல் நான் உன்னை பிரிய மாட்டேன்.</p>

<p><strong>சாணைக்கல் எங்கு பயன்படுத்தப்படுகிறது?</strong></p>

<p>வைரம் தீட்டும் தொழிலுக்கு.</p>

<p><strong>வைரம் தீட்டும் தொழில் எங்கு நடைபெறுகிறது?</strong></p>

<p>பொதினி மலையில்.</p>

<p><strong>பொதினி மலையின் சிறப்பு என்ன?</strong></p>

<p>அலங்கரிக்கப்பட்ட தந்தங்களையுடைய யானைகள் மிகுந்த மலை.</p>

<p><strong>அந்த யானைகள் யாருடையவை?</strong></p>

<p>மன்னன் நெடுவேல் ஆவியின் யானைகள்.</p>

<p><strong>மன்னன் நெடுவேள் ஆவி எப்படிப்பட்டவன்?</strong></p>

<p>குறிஞ்சித்திணை கடவுள் முருகனைப் போல் தர்ம நெறி தவறாமல் போர் புரிபவன்.</p>

<p><strong>அப்படி என்ன போர் புரிந்தான்?</strong></p>

<p>மழநாட்டை சேர்ந்த மழவர்களை போரில் விரட்டியடித்தான்.</p>

<p><strong>யார் அந்த மழவர்கள்?</strong></p>

<p>அச்சுறுத்தக்கூடிய வலிமையான குதிரைகளில் பயணம் செய்பவர்கள். கால்களில் தண்டை அணிந்தவர்கள். வண்டுகள் மொய்க்கும் மலர்ந்த பூக்களால் ஆன
மாலைகளை அணிந்தவர்கள்.</p>

<p>பார்த்தீர்களா? சொல்ல வந்த கருத்து மட்டுமல்லாமல், அதைச் சுற்றி நடைபெற்ற நிகழ்வுகளையும், நடைபெற்ற இடத்தையும், அந்த இடத்தை ஆண்ட
மன்னனையும், வாழ்ந்த மக்களையும் பற்றி ஒரு ஒரு தெளிவான ஒரு பார்வை நமக்கு முன் விரிகிறது.</p>

<p>இந்தப் பாடலின் இரண்டாம் பகுதியாக இருக்கும் பாலைத் திணையைப் பற்றிய குறிப்பும் இத்தகையதே.</p>

<p>“அவர் என்னை பிரிந்து அந்தக் கொடுமையான காட்டை தாண்டி பொருள் சேர்க்க சென்றார்.”</p>

<p>இதுதான் அவர் சொல்ல விழைந்த கருத்து. ஆனால் அந்த பாலைநிலத்தை பற்றி அவர் விவரித்த போது பாலைநிலத்துக்கு ஒரு நடைபயணம் போய் வந்த அனுபவம் நமக்கு கிடைக்கிறது.</p>

<h2 id="குறிப்புகள்">குறிப்புகள்</h2>

<ul>
  <li><a href="https://www.youtube.com/watch?v=ggMi0Ym6fnM">சாணைக்கல் செய்யும் முறை - ஆங்கில விளக்கம்</a></li>
</ul>
]]></description>
				
					<author><![CDATA[ (பிரேம்குமார் மாசிலாமணி)]]></author>
				
				<category><![CDATA[]]></category>
				<pubDate>Fri, 28 Sep 2018 00:00:00 +0530</pubDate>
				<guid isPermaLink="true">https://www.premkumarmasilamani.com/tamil/a400/001-vandu-padatha-thaintha/</guid>
			</item>
		
			<item>
				<title><![CDATA[000 - கார்விரி கொன்றை]]></title>
				<link><![CDATA[https://www.premkumarmasilamani.com/tamil/a400/000-karviri-kondrai/]]></link>
				<description><![CDATA[<table>
  <tbody>
    <tr>
      <td><strong>நூல்</strong></td>
      <td>அகநானூறு</td>
    </tr>
    <tr>
      <td><strong>பாடல்</strong></td>
      <td>000 - கார்விரி கொன்றை</td>
    </tr>
    <tr>
      <td><strong>பாடியவர்</strong></td>
      <td>பெருந்தேவனார்</td>
    </tr>
    <tr>
      <td><strong>திணை</strong></td>
      <td>பாடாண்</td>
    </tr>
    <tr>
      <td><strong>துறை</strong></td>
      <td>கடவுள் வாழ்த்து</td>
    </tr>
  </tbody>
</table>

<p>கார்விரி கொன்றைப் பொன்னேர் புதுமலர்த் <br />
தாரன் மாலையன் மலைந்த கண்ணியன் <br />
மார்பி னஃதே மையி னுண்ஞா <br />
ணுதல திமையா நாட்ட மிகலட்டுக் <br />
கையது கணிச்சியொடு மழுவே மூவாய் (5)</p>

<p>வேலு முண்டத் தோலா தோற்கே <br />
யூர்ந்த தேறே சேர்ந்தோ ளுமையே <br />
செவ்வா னன்ன மேனி யவ்வா <br />
னிலங்குபிறை யன்ன விலங்குவால் வையெயிற் <br />
றெரியகைந் தன்ன வவிர்ந்துவிளங்கு புரிசடை (10)</p>

<p>முதிராத் திங்களொடு சுடருஞ் சென்னி <br />
மூவா வமரரு முனிவரும் பிறரும் <br />
யாவரு மறியாத் தொன்முறை மரபின் <br />
வரிகிளர் வயமா னுரிவை தைஇய <br />
யாழ்கெழு மணிமிடற் றந்தணன் (15)</p>

<p>றாவி றாணிழற் றவிர்ந்தன்றா லுலகே. (16)</p>

<h2 id="படி-1-சொற்களை-பிரித்து-எழுதுவோம்">படி 1: சொற்களை பிரித்து எழுதுவோம்</h2>

<p>கார் விரி கொன்றை பொன் ஏர் புதுமலர் <br />
தாரன் மாலையன் மலைந்த கண்ணியன் <br />
மார்பின் அஃதே மை இல் நுண் ஞாண் <br />
நுதல் அது இமையா நாட்டம் இகல் இட்டு <br />
கை அது கணிச்சியோடு மழுவே மூவாய் (5)</p>

<p>வேலும் உண்டு அத் தோலாது ஒற்கே <br />
ஊர்ந்தது ஏறே சேர்ந்தோள் உமையே <br />
செவ்வான் அன்ன மேனி அவ்வான் <br />
இலங்கு பிறை அன்ன விலங்கு வால் வை எயிற்று <br />
எரி அகைந்து அன்ன அவிர்ந்து விளங்கு புரி சடை (10)</p>

<p>முதிரா திங்களொடு சுடரும் சென்னி <br />
மூவா அமரரும் முனிவரும் பிறரும் <br />
யாவரும் அறியா தொல் முறை மரபின் <br />
வரி கிளர் வயமான் உரிவை தைஇய <br />
யாழ் கெழு மணி மிடற்று அந்தணன் (15)</p>

<p>தா இல் தாள் நிழல் தவிர்ந்து அன்று ஆல் உலகே. (16)</p>

<h2 id="படி-2-சொற்களின்-அர்த்தத்தை-புரிந்து-கொள்வோம்">படி 2: சொற்களின் அர்த்தத்தை புரிந்து கொள்வோம்</h2>

<blockquote>
  <p>கார் விரி கொன்றை பொன் ஏர் புதுமலர்
  தாரன் மாலையன் மலைந்த கண்ணியன்</p>
</blockquote>

<p><strong>கார்</strong> - மழைக்காலம்; 
<strong>விரி</strong> - மலர்தல்; 
<strong>கொன்றை</strong> - மஞ்சள் நிற பூக்களை உடைய மரம்; 
<strong>பொன்</strong> - தங்கம்; 
<strong>ஏர்</strong> - பொலிவு; 
<strong>புதுமலர்</strong> - புதிதாக பூத்த மலர்; 
<strong>தாரன்</strong> - உடையவன்; 
<strong>மாலையன்</strong> - மாலையை உடையவன்;
<strong>மலைந்த</strong> - சுமந்த; 
<strong>கண்ணியன்</strong> - வேடன்;</p>

<p>மழைக்காலத்தில் புதிதாக பூத்த, தங்கம் போல் ஜொலிக்கும் மஞ்சள் நிற கொன்றை பூக்களால் ஆன மாலைகளை அணிந்த வேடன்.</p>

<blockquote>
  <p>மார்பின் அஃதே மை இல் நுண் ஞாண்</p>
</blockquote>

<p><strong>மார்பின் அஃதே</strong> - மார்பின் இடையே; 
<strong>மை</strong> - குற்றம்; 
<strong>இல்</strong> - இன்மை;
<strong>நுண்</strong> - நுட்பமான; 
<strong>ஞாண்</strong> - கயிறு;</p>

<p>மார்பினில் குற்றமற்ற நுட்பமான கயிறு. தூய்மையான கயிறு ஒன்றை மார்பில் அணிந்திருக்கிறான் என்று பொருள்.</p>

<p>மார்பில் அணியும் இந்த கயிருக்கு வேறு தமிழ் பெயர்கள் உண்டா என தெரியவில்லை. அம்புகளை எடுத்து செல்லும் அம்பறாத் தூணியில்
இருக்கும் கயிறாக இருக்கலாம்.</p>

<p>சில உரையாசிரியர்கள் இதை பிராமணர்கள் அணியும் பூநூல் என்று சொல்கிறார்கள். சங்க காலத் தமிழர் சமூகத்தில் சைவமும் (சிவநெறி),
வைணவமும் (திருமால்நெறி) மிக முக்கியமான வழிபாட்டு முறைகளாக விளங்கின. சங்கம் மருவிய களப்பிரர் காலத்தில் சமணமும் பௌத்தமும்
செல்வாக்குடன் விளங்கின. பல நூற்றாண்டுகள், இந்த மதங்களுக்கு இடையே போட்டியும், வன்முறையும் தொடர்ந்து கொண்டிருந்தது.
இந்த காலகட்டங்களில் தற்போது அறியப்படுகிற இந்துமதம் என்ற ஒன்று உருவாகவே இல்லை. இதனால், சங்க காலத்து கடவுளான சிவன் மார்பில்
அணிந்த கயிறு, பூநூல் என்பது அறிவுக்கொவ்வாத கற்பனை.</p>

<p>ஒருவேளை, சங்க காலத்தில் அனைத்து குலத்தவர்களும் அணிந்த இந்த கயிறு, பிற்காலத்தில் பிராமண குலத்தை சேர்ந்தவர்
மட்டும் அணியும் கயிறாக (பூநூல்) மாற்றப்பட்டதோ?. தெரிந்தவர்கள் சொல்லவும்.</p>

<blockquote>
  <p>நுதல் அது இமையா நாட்டம்</p>
</blockquote>

<p><strong>நுதல்</strong> - நெற்றி; 
<strong>இமையா</strong> - இமைக்காத; 
<strong>நாட்டம்</strong> - கண்;</p>

<p>அவன் நெற்றியில் இமைக்காத கண்.</p>

<blockquote>
  <p>இகல் இட்டு கை அது கணிச்சியோடு மழுவே மூவாய்
  வேலும் உண்டு அத் தோலாது ஒற்கே</p>
</blockquote>

<p><strong>இகல்</strong> - பகை; 
<strong>இட்டு</strong> - சிறுமை, அழிக்கும் என பொருள்; 
<strong>கணிச்சி</strong> - குந்தாலி, மண்வெட்டி, தரையை குத்தி தோண்டும் கருவி; 
<strong>மழு</strong> - கோடாலி, மரத்தை பிளக்கும் கருவி; 
<strong>மூவாய் வேல்</strong> - மூன்று வாய்களை உடைய திரிசூலம்; 
<strong>தோலாது</strong> - தோல்வியடையாது; 
<strong>ஒற்கே</strong> - தளராது;</p>

<p>கைகளில் மண்வெட்டி, கோடாலி, திரிசூலம் ஆகியவற்றைக் கொண்டு தளராது தோல்வி அடையாது பகையினை அழித்தவன்.</p>

<blockquote>
  <p>ஊர்ந்தது ஏறே சேர்ந்தோள் உமையே</p>
</blockquote>

<p><strong>ஊர்ந்தது</strong> - ஏறி சென்றது; 
<strong>ஏறு</strong> -  எருது; 
<strong>சேர்ந்தோள்</strong> - சேர்ந்தவள்;
<strong>உமை</strong> - பார்வதி;</p>

<p>எருதின் மேலேறி பயணம் செய்பவன். அவனோடு சேர்ந்திருப்பவள் உமை எனும் பெயருடையவள்.</p>

<blockquote>
  <p>செவ்வான் அன்ன மேனி அவ்வான்
இலங்கு பிறை அன்ன விலங்கு வால் வை எயிற்று</p>
</blockquote>

<p><strong>செவ்வான்</strong> - செந்நிற வானம்; 
<strong>அன்ன</strong> - அத்தன்மையானவை; 
<strong>அவ்வான்</strong> - அந்த வானம்; 
<strong>இலங்கு</strong> - ஒளிசெய்; 
<strong>பிறை</strong> - இளஞ்சந்திரன்; 
<strong>விலங்கு</strong> - குறுக்கானது; 
<strong>வால்</strong> - வெண்மை; 
<strong>வை</strong> - கூர்மை; 
<strong>எயிறு</strong> - பல்;</p>

<p>செந்நிற வானம் போன்ற மேனியை உடையவன். அந்த வானத்தில் பிரகாசமாய் இருக்கும் இளம் சந்திரனைப் போன்று கூரிய வெண்மையான பற்களை உடையவன்.</p>

<blockquote>
  <p>எரி அகைந்து அன்ன அவிர்ந்து விளங்கு புரி சடை</p>
</blockquote>

<p><strong>ஏரி</strong> - பிரகாசம்; 
<strong>அகைந்து</strong> - கொழுந்து விட்டு; 
<strong>அவிர்</strong> - கண்களை கூசவைக்காமல், கண்ணை கவரும் ஒளியுடைய; 
<strong>புரிசடை</strong> - திரண்டு சுருண்ட சடை;</p>

<p>கண்களை கூசவைக்காமல், கண்ணை கவரும் வகையில் கொழுந்து விட்டு எரியும் நெருப்பைப் போல் திரண்டு சுருண்ட சடையினை உடையவன்.</p>

<blockquote>
  <p>முதிரா திங்களொடு சுடரும் சென்னி
  மூவா அமரரும் முனிவரும் பிறரும்
  யாவரும் அறியா தொல் முறை மரபின்</p>
</blockquote>

<p><strong>முதிரா திங்கள்</strong> - முதிராத சந்திரன், இளமையான சந்திரன்; 
<strong>சுடர்</strong> - சூரியன்; 
<strong>சென்னி</strong> - சிறப்பு; 
<strong>மூவா</strong> - மூப்பில்லாதவர்; 
<strong>அமரர்</strong> - வானில் உள்ளோர்; 
<strong>தொல்</strong> - பழைய; 
<strong>முறை</strong> - பிறப்பு; 
<strong>மரபு</strong> - பாரம்பரியம்;</p>

<p>முதிராத சந்திரனும் (இளமையான சந்திரன் எனக் பொருள் கொள்க), சிறப்புமிக்க சூரியனும், மூப்பு என்பதை அறியாத வானோர்களும்,
முனிவர்களும், மற்ற எவரும் அறியாத பழமையான பிறப்பினை உடையவன். நமக்கு தெரிந்த, தெரியாத அனைத்திற்கும் முன்பே உருவானவன்.
வள்ளுவன் குறிப்பிடும் ஆதி பகவன் இவனென கொள்ளலாம்.</p>

<blockquote>
  <p>வரி கிளர் வயமான் உரிவை தைஇய</p>
</blockquote>

<p><strong>வரி</strong> - கோடு; 
<strong>கிளர்</strong> - மிகுதல்; 
<strong>வயமான்</strong> - புலி; 
<strong>உரிவை</strong> - தோல்; 
<strong>தைஇய</strong> - இழைத்த;</p>

<p>கோடுகள் நிறைய உடைய புலியினுடைய தோலில் இழைத்த ஆடையினை அணிந்தவன்.</p>

<blockquote>
  <p>யாழ் கெழு மணி மிடற்று அந்தணன்</p>
</blockquote>

<p><strong>யாழ்</strong> - வீணை போன்ற பண்டைய தமிழரின் இசைக்கருவி; 
<strong>கெழு</strong> - பொருந்து; 
<strong>மணி</strong> - கருமை; 
<strong>மிடறு</strong> - தொண்டை, கழுத்து; 
<strong>அந்தணன்</strong> = அம் + தண் + அன், அம் - அழகு, தண் - அருள், அன் - ஆண்பால் வினைவிகுதி, அழகும் அருளும் உடைய ஆண்;</p>

<p>யாழிசையை ஒத்த இனிய குரலினையும், கருமையான கழுத்தினையும் உடைய, அன்பும் அருளும் பொருந்திய ஆண்மகன். இங்கு அந்தணன் என்பது பிராமணனை
குறிக்கும் சொல் அல்ல.</p>

<p>அந்தணன் = அம் + தண் + அன், அம் - அழகு, தண் - அருள், அன் - ஆண்பால் வினைவிகுதி, அழகும் அருளும் உடைய ஆண் என பொருள் கொள்க.
வள்ளுவன் கூறியது போல், அந்தணர் என்போர் அறவோர் என பொதுவாகவும் பொருள் கொள்ளலாம்</p>

<blockquote>
  <p>தா இல் தாள் நிழல் தவிர்ந்தன்று ஆல் உலகே</p>
</blockquote>

<p><strong>தா</strong> - கேடு; 
<strong>இல்</strong> - இல்லாத; 
<strong>தாள்</strong> - கால்; 
<strong>தவிர்ந்து</strong> - தவிர்த்தல்; 
<strong>அன்று</strong> - மாறுபாடு; 
<strong>தவிர்ந்தன்று</strong> - தவிர்க்காமல் இருத்தல், சேர்ந்து இருத்தல்; 
<strong>ஆல்</strong> - வியப்பு; 
<strong>உலகு</strong> - உலகம்.</p>

<p>அவனது கேடில்லாத கால்நிழலில் (காலடியில்) சேர்ந்திருக்கிறது (பாதுகாப்பாய் இருக்கின்றது) வியக்கத்தக்க இந்த உலகம்.</p>

<h2 id="படி-3-பாடலின்-பொருள்-மட்டும்---எளிமையாக">படி 3: பாடலின் பொருள் மட்டும் - எளிமையாக</h2>

<p>மழைக்காலத்தில் புதிதாக பூத்த, தங்கம் போல் ஜொலிக்கும் மஞ்சள் நிற கொன்றை பூக்களால் ஆன மாலைகளை அணிந்த வேடன்.</p>

<p>தூய்மையான கயிறு ஒன்றை மார்பில் அணிந்திருக்கிறான்.</p>

<p>அவன் நெற்றியில் இமைக்காத கண்.</p>

<p>கைகளில் மண்வெட்டி, கோடாலி, திரிசூலம் ஆகியவற்றைக் கொண்டு தளராது தோல்வி அடையாது பகையினை அழித்தவன்.</p>

<p>எருதின் மேலேறி பயணம் செய்பவன்.</p>

<p>அவனோடு சேர்ந்திருப்பவள் உமை எனும் பெயருடையவள்.</p>

<p>செந்நிற வானம் போன்ற மேனியை உடையவன்.</p>

<p>அந்த வானத்தில் பிரகாசமாய் இருக்கும் இளம் சந்திரனைப் போன்று கூரிய வெண்மையான பற்களை உடையவன்.</p>

<p>கண்களை கூசவைக்காமல், கண்ணை கவரும் வகையில் கொழுந்து விட்டு எரியும் நெருப்பைப் போல் திரண்டு சுருண்ட சடையினை உடையவன்.</p>

<p>முதிராத சந்திரனும், சிறப்புமிக்க சூரியனும், மூப்பு என்பதை அறியாத வானோர்களும், முனிவர்களும், மற்ற எவரும் அறியாத பழமையான பிறப்பினை உடையவன். நமக்கு தெரிந்த, தெரியாத அனைத்திற்கும் முன்பே உருவானவன்.</p>

<p>கோடுகள் நிறைய உடைய புலியினுடைய தோலில் இழைத்த ஆடையினை அணிந்தவன்.</p>

<p>யாழிசையை ஒத்த இனிய குரலினையும், கருமையான கழுத்தினையும் உடைய, அன்பும் அருளும் பொருந்திய ஆண்மகன்.</p>

<p>அவனது கேடில்லாத கால்நிழலில் (காலடியில்) சேர்ந்திருக்கிறது (பாதுகாப்பாய் இருக்கின்றது) வியக்கத்தக்க இந்த உலகம்.</p>

<h2 id="படி-4-பாடலை-பற்றிய-என்-கருத்துக்கள்">படி 4: பாடலை பற்றிய என் கருத்துக்கள்</h2>

<p>தமிழர்களின் ஒவ்வொரு நூலும் கடவுள் வாழ்த்துடன் ஆரம்பிப்பது வழக்கம். அகநானூறு தொகுக்கப்பட்ட காலத்தில், இந்த கடவுள் வாழ்த்து இயற்றப்பட்டு
சேர்க்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த கடவுள் வாழ்த்து பாடலை தவிர்த்து அகநானூற்றில் நானூறு பாடல்கள் உள்ளன.</p>

<p>ஐந்திணை பாடல்களை உள்ளடக்கிய தொகுப்பில், சிவனை கடவுள் வாழ்த்தில் வைத்து பாடியதில் எனக்கு உடன்பாடில்லை. ஐந்திணை
கடவுள்களையும் வாழ்த்தி பாடியிருந்தால் பொருத்தமாய் இருந்திருக்கும்.</p>

<p>தாம் பாடும் கடவுள் இன்னார் என் நேரடியாக கூறாமல், அவருடைய தன்மைகளை விவரித்து கூறி, அவர் யாரென நமக்கு உணர்த்தும் பாங்கு நன்றாக இருக்கிறது.
நல்ல கற்பனை வளம் மிகுந்த உவமைகள்.</p>

<p>எனக்கு மிகவும் பிடித்த சொல்லாடல் - <strong>முதிரா திங்கள்</strong>.</p>

<p>இளமையை குறிக்கும் சொற்கள் பொதுவாக நேரிடையாக இருக்கும்.
இளங்கதிர், இளந்தென்றல், இளவல் என்பன போல். ஆனால், பெருந்தேவனாரோ இளமையான சந்திரன் எனும் பொருளில் “இளந்திங்கள்” என்று
கூறாமல், எதிர்மறையாக  “முதிரா திங்கள்” என கூறுகிறார். “இளந்திங்கள்” என்று சொல்லும் போது, அது தற்போது இளமையாக இருக்கிறது,
பின்னால் முதிர்வடையும் என்பது நிதர்சனம். ஆனால் “முதிரா திங்கள்” என்று சொல்லும் போது, அது எப்போதும் முதிர்வடையாமல் இளமையாகவே இருக்கும்.
என்ன ஒரு ரசனைக்குரிய ஆழமான சிந்தனை?</p>

<p>நாத்திகனாக இருந்த போதிலும் எனக்கு இந்த பாடல் பிடித்திருக்கிறது.</p>
]]></description>
				
					<author><![CDATA[ (பிரேம்குமார் மாசிலாமணி)]]></author>
				
				<category><![CDATA[]]></category>
				<pubDate>Fri, 21 Sep 2018 00:00:00 +0530</pubDate>
				<guid isPermaLink="true">https://www.premkumarmasilamani.com/tamil/a400/000-karviri-kondrai/</guid>
			</item>
		
			<item>
				<title><![CDATA[தமிழ் இலக்கியங்கள் ஏன் புரிவதில்லை?]]></title>
				<link><![CDATA[https://www.premkumarmasilamani.com/tamil/a400/ilakiyangal-yen-purivathillai/]]></link>
				<description><![CDATA[<p>ஒரு சினிமா பாட்டை கேட்கும் போது நமக்கு நன்றாக புரிகிறது. நவீன காலத்து கவிஞர்கள் எழுதும் கவிதையைப் படிக்கும் போது நமக்கு நன்றாக புரிகிறது. ஆனால், சங்க காலம் தொட்டு எழுதப்பட்ட இலக்கியங்கள் நமக்கு புரிவதில்லை. ஏன் என்று யோசித்தீர்களா?</p>

<p>என்னால் தமிழில் எழுத, படிக்க, பேச முடியும். தமிழில் கவிதைகள் கூட எழுத முடியும். ஆனால் தமிழுக்கு பெருமை சேர்க்கக்கூடிய சங்க இலக்கியங்களில் ஏதாவது ஒரு இலக்கியத்தை, என்னால் உரையின்றி படித்து புரிந்து கொள்ள முடியாது. ஏன் இந்த நிலைமை?</p>

<p>அதற்கான காரணங்கள் என்னென்ன என்று யோசித்துப் பார்க்கும்போது, மூன்று விசயங்கள் தெளிவாகின்றன.</p>

<h2 id="காரணம்-1-இலக்கியங்கள்-படிப்பதற்கு-கடினமாக-உள்ளன">காரணம் 1: இலக்கியங்கள் படிப்பதற்கு கடினமாக உள்ளன.</h2>

<p>ஒவ்வொரு இலக்கியமும் குறிப்பிட்ட இலக்கண விதிகளின்படி எழுதப்பட்டுள்ளது. அந்த இலக்கண விதிகளுக்கும், அந்த பாடலுக்குரிய எதுகை மோனைக்கும் தகுந்தாற்போல் வார்த்தைகள் அமையாத பட்சத்தில், சொற்களை பிரித்தும் சேர்த்தும் எழுதும் பொழுது, அது படிக்க சற்று கடினமாக ஆகிவிடுகிறது. அதே செய்யுளை, அதன் வார்த்தைகளை தனி தனியாக பிரித்து எழுதினால், படிப்பதற்கு இலகுவாகிறது.</p>

<p><strong>உதாரணம்:</strong></p>

<blockquote>
  <p>உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து <br />
  வேண்டி அவர்க்கண்ட கண்.</p>
</blockquote>

<p>இதை பிரித்து எழுதினால்,</p>

<blockquote>
  <p>உழந்து உழந்து உள்நீர் அறுக விழைந்து இழைந்து <br />
  வேண்டி அவர் கண்ட கண்.</p>
</blockquote>

<p>படிப்பதற்கு சுலபமாக இருக்கிறதல்லவா?</p>

<p>இப்பொழுது நம்மால் படிக்க முடிகிறது. ஆனால் அர்த்தம் புரிகிறதா?. எனக்கு புரியவில்லை.</p>

<h2 id="காரணம்-2-தமிழ்-சொற்தொகையில்-புலமை-இன்மை">காரணம் 2: தமிழ் சொற்தொகையில் புலமை இன்மை.</h2>

<p>தமிழில் இலட்சக்கணக்கான சொற்கள் உள்ளன. ஆனால், அன்றாட வாழ்க்கையில் நாம் பேசும் தமிழுக்கு சில நூற்றுக்கணக்கான சொற்களே போதும். நீங்கள் கவிஞராகவோ, கதாசிரியராகவோ இருந்தால் சில ஆயிரம் சொற்கள் மட்டுமே போதும்.</p>

<p>சில நூற்றுக்கணக்கான சொற்களை மட்டும் தெரிந்துகொண்டு, இலட்சக்கணக்கான சொற்களை கொண்டு எழுதப்பட்ட இலக்கியங்களை புரிந்துகொள்வது சாத்தியமில்லை. தமிழ் அகராதி நமக்கு தேவைப்படுகிறது. சங்க இலக்கியங்களை தமிழ் அகராதியை வைத்துக்கொண்டு படிக்கும் பொழுது, அந்த சொற்கள் திரும்பத் திரும்ப பயன்படுத்தப்படும் பொழுது, அந்த சொல்லும் பொருளும் நம் மனதில் ஆழமாகப் பதியும். வெகு விரைவில் நமக்கு புரிந்த சொற்தொகையின் எண்ணிக்கை கூடி கொண்டே போகும். நாம் படித்திராத இலக்கியங்களையும் கூட எளிதாக படித்து புரிந்துகொள்ள முடியும்.</p>

<p>மேலே குறிப்பிட்ட குறளிலுள்ள சொற்களின் பொருள் விளக்கம் இதோ.</p>

<p><strong>உழந்து</strong> -  வருந்தி <br />
<strong>உள்நீர்</strong> -  உள்ளேயுள்ள நீர் <br />
<strong>அறுக</strong> -  அற்றுப்போக <br />
<strong>விழைந்து</strong> -  விரும்புதல் <br />
<strong>இழைந்து</strong> -  இணைதல் <br />
<strong>வேண்டி</strong> - விரும்புதல் <br />
<strong>அவர்</strong> - அவர், காதலர் <br />
<strong>கண்ட</strong> - பார்த்த <br />
<strong>கண்</strong> - கண்</p>

<p>இப்பொழுது உங்களால் இக்குறளை சுலபமாக படிக்க முடியும். இக்குறளில் பயன்படுத்தப்பட்டுள்ள ஒவ்வொரு சொல்லின் அர்த்தமும் தெரியும். ஆனாலும் எனக்கு, இந்த குறள் சொல்ல வரும் கருத்து முழுமையாக விளங்கவில்லை.</p>

<h2 id="காரணம்-3-சொற்றொடர்-வரிசை-மாறி-இருப்பது">காரணம் 3: சொற்றொடர் வரிசை மாறி இருப்பது</h2>

<p>ஒவ்வொரு கவிஞருக்கும் ஒவ்வொரு பாணி உண்டு. அவர் தம் பாணியில் தம் விருப்பம் போல் சொற்றொடர்களை மாறி அமைத்து செய்யுளை  வடிவமைப்பது உண்டு. இதை குற்றம் என்று சொல்ல முடியுமா என தெரியவில்லை. இப்படி மாற்றி எழுதுவதால் ஏதாவது பயனுண்டா என்றும் தெரியவில்லை. ஒருவேளை இலக்கண விதிகளுக்காகவும், எதுகை மோனைக்காகவும் இருக்கலாம். திருவள்ளுவருக்கு இப்படி சொற்றொடர்களை மாற்றி எழுதுவது பிடிக்கும் என நினைக்கிறேன்.</p>

<p>இதே திருக்குறளை, சொற்றொடர் வரிசை மாற்றி அமைத்து பார்ப்போமா?</p>

<blockquote>
  <p>விழைந்து இழைந்து வேண்டி அவர் கண்ட கண், உழந்து உழந்து உள்நீர் அறுக.</p>
</blockquote>

<p>ஏதோ புரிகிற மாதிரி இருக்கிறதல்லவா?. சொற்களின் பொருளை பொருத்தி பார்க்கும் போது,</p>

<blockquote>
  <p>வேண்டி விரும்பி தன் காதலரை கண்ட கண்கள், வருந்தி வருந்தி தன்னிடம் உள்ள நீர் (கண்ணீர்) அற்று போகட்டும். <br />
  ‐ காதலரை பிரிந்து வாடும் காதலியின் புலம்பல்.</p>
</blockquote>

<p>உங்களுக்கு இக்குறள் இப்போது புரிகிறதா?</p>

<p>எனக்கு புரிகிறது.</p>

<h2 id="அடுத்தது-என்ன">அடுத்தது என்ன?</h2>

<p>சங்க இலக்கியங்களில் இருந்து ஒரு இலக்கியத்தை தேர்ந்தெடுத்து, அந்த இலக்கியத்தை உரைகளின் துணை இல்லாமல் அகராதியின் துணையோடு நான் புரிந்துகொள்ள முயற்சி செய்யப் போகிறேன். என்னுடைய புரிதலை தொடர்பதிவாக எழுத இருக்கிறேன்.</p>

<p>அது சொல்லப்பட்ட கருத்தின் தொன்மையும், ஆழமும் தெரியாமல் முதிர்ச்சி இல்லாத ஒரு அடிமட்ட புரிதலாக இருக்கலாம். அல்லது பண்டைய இலக்கியத்தை இருபதாம் நூற்றாண்டு இளைஞனின் வாழ்வியல் மூலமாக பார்க்கும் கண்ணோட்டமாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும், அது என்னுடைய புரிதல். மிக தவறாக இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். என் புரிதலை மேம்படுத்தி கொள்கிறேன்.</p>

<p>நான் புரிந்துகொள்ள போகும் முதல் இலக்கியம் - <strong>அகநானூறு</strong>.</p>
]]></description>
				
					<author><![CDATA[ (பிரேம்குமார் மாசிலாமணி)]]></author>
				
				<category><![CDATA[]]></category>
				<pubDate>Sun, 16 Sep 2018 00:00:00 +0530</pubDate>
				<guid isPermaLink="true">https://www.premkumarmasilamani.com/tamil/a400/ilakiyangal-yen-purivathillai/</guid>
			</item>
		
	</channel>
</rss>
