சலனமில்லா பெருங்கூச்சல்
பிரேம்குமார் மாசிலாமணி
12 Jul 2011
உயிரின் உணர்வை தமிழில் கலந்து
வலியை மறந்து, இதயம் கடந்து
பறக்க துடித்தது சிறகற்ற பறவை
கவிதையில் புதைத்தது, தன் பெயரற்ற உறவை.
என் ரணத்திற்கு மருந்தாகிய கவிதைகள்
உன் மனதிற்கு விருந்தாகிய தருணங்கள்
கவிதைகளை காதலிக்கும்
காதலின் புதுக்கவிதையே
முடிவுரைக்கு பின் முன்னுரையா?
கல்லறையில் பூத்த மல்லிகையா?
இறந்து போனது நான் இல்லையா? - மீண்டும்
பிறக்க வைத்தது நீ இல்லையா?
சிரித்து பேசி, சிறைகள் உடைத்தாய்
சிமிட்டும் விழியில், இதயம் துளைத்தாய்
கவிஞன் மனதில் கனவுகள் விதைத்தாய்
கவிதைகள் பாடி, சிறகுகள் கொடுத்தாய்.
இரவின் மடியில் வெள்ளி முளைப்பதும்
காதல் விழியில் கவிதை பிறப்பதும்
ஆதாம் ஏவாள் அறிந்த செய்தி
விளங்க வைத்தாய் என்னுயிரில் ஓதி.
மலர்கள் பேசும் மொழிகள் கேட்டு
மயக்கும் குயிலின் ராகம் போட்டு
உனக்கு சொல்வேன் தமிழில் பாட்டு
உயிரில் வெடிக்கும் காதல் வேட்டு.
சிட்டுக்குருவியின் இறகுகள் தேடி
செய்து வைப்பேன் மஞ்சங்கள் கோடி
விடிய விடிய கவிதைகள் பாடி
என் இரவுகள் கூறும் நன்றிகள் கோடி.
‐ கவிதைகளில் உயிர்த்திருக்கும் என் ரசிகைக்கு சமர்ப்பணம்.
இந்த வலைப்பதிவை படித்ததற்கு நன்றி. இது உங்களை மகிழ்வித்து இருக்கும் அல்லது சிந்திக்க தூண்டியிருக்குமென நம்புகிறேன். உங்கள் எண்ணங்கள் மற்றும் கேள்விகளை பகிர்ந்துகொள்ள விரும்பினால்: